லண்டன்: இந்திய அணியின் நட்சத்திர வீரரும், சிஎஸ்கே அணியின் கேப்டனுமான ருதுராஜ் கெய்க்வாட், இங்கிலாந்தில் கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரில் விளையாட ஒப்பந்தமாகி உள்ளார். விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோர் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற நிலையில், ருதுராஜுக்கு டெஸ்ட் அணியில் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், அவர் இந்திய டெஸ்ட் அணியில் சேர்க்கப்படவில்லை. இந்த நிலையில் தான் கவுண்டி டெஸ்ட் போட்டிகளுக்கும், ஒருநாள் கோப்பைக்கும் யார்க்ஷயர் அணியுடன் இணையவுள்ளார். ஜூலை மாதம் ஸ்கார்பரோவில் சர்ரேக்கு எதிரான கவுண்டி போட்டிக்கு முன்பாக ருதுராஜ் யார்க்ஷயர் அணியுடன் இணைவார் மற்றும் சீசன் முடியும் வரை அணியுடன் இருப்பார் என்று அந்த அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

28 வயதான ருதுராஜ் தற்போது இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் உள்ள இந்தியா ஏ அணியில் உள்ளார். அங்கு அவர்கள் இங்கிலாந்து லயன்ஸுக்கு எதிராக இரண்டு நான்கு நாள் பயிற்சி டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளனர். மேலும் அவர்களின் கடைசி பணியாக ஜூன் 13-16 வரை பெக்கன்ஹாமில் சீனியர் அணிக்கு எதிராக Intra squad நான்கு நாள் போட்டி உள்ளது.
ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ரஞ்சி டிராஃபியில் மகாராஷ்டிரா அணிகளின் கேப்டனாக இருக்கும் ருதுராஜ் ஆறு சர்வதேச ஒருநாள் போட்டிகளிலும், 23 டி20 சர்வதேச போட்டிகளிலும் விளையாடியுள்ளார். வலது கை பேட்ஸ்மேனான இவர் முதல் நான்கு இடங்களில் எங்கு வேண்டுமானாலும் பேட்டிங் செய்ய முடியும் மற்றும் இந்தியாவுக்காக தேவைப்படும்போது தொடக்க ஆட்டக்காரராகவும் விளையாடி தனது பன்முகத்தன்மையை வெளிப்படுத்தியுள்ளார்.
கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடுவது குறித்து பேசிய ருதுராஜ், "இங்கிலாந்தில் கிரிக்கெட் விளையாடுவது எப்போதும் எனது இலக்காக இருந்தது. இங்கிலாந்தில் யார்க்ஷயரை விட பெரிய கிளப் எதுவும் இல்லை என்று கூறினார். "சீசனின் முக்கியமான பகுதியில் நான் விரைவாக பங்களிக்க வேண்டியது எவ்வளவு முக்கியம் என்பது எனக்குத் தெரியும். கவுண்டி சாம்பியன்ஷிப்பில் சில முக்கியமான போட்டிகள் உள்ளன."
"மேலும் ஒருநாள் கோப்பை இது தமக்கு வெல்ல சிறந்த வாய்ப்பாகும் என்று கூறினார். இதனைத் தொடர்ந்து பேசிய யார்க்ஷயர் தலைமை பயிற்சியாளர் அந்தோனி மெக்ராத், ருதுராஜின் வருகை அணிக்கு "கூடுதல் உறுதித்தன்மையை" கொண்டு வரும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
"அவர் மிகவும் திறமையான கிரிக்கெட் வீரர், நாங்கள் விளையாட விரும்பும் கிரிக்கெட்டுக்கு ஏற்ற அனைத்து திறன்களையும் கொண்டவர். ருதுராஜ் எங்கள் பேட்டிங் வரிசைக்கு கூடுதல் உறுதித்தன்மையை அளிப்பார், அதே நேரத்தில் தேவைப்படும்போது விரைவாக ரன்களை எடுக்கும் திறனையும் கொண்டவர்.அவர் ஒரு அற்புதமான திறமைசாலி," என்று அவர் கூறினார்.
யார்க்ஷயர் தற்போது 10 அணிகள் கொண்ட டிவிஷன் ஒன் புள்ளிப்பட்டியலில் ஒரு வெற்றி, நான்கு தோல்விகள் மற்றும் இரண்டு டிரா ஆட்டங்களுடன் கடைசியில் இருந்து இரண்டாவது இடத்தில் உள்ளது. நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் ருதுராஜ்க்கு காயம் ஏற்பட்டதால், தொடரிலிருந்து பாதியில் விலகினார்.
இது சிஎஸ்கே அணிக்கு மிகப் பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது. தற்போது ருதுராஜ் உடல் தகுதியை நிரூபித்த நிலையிலும், இந்திய ஏ அணி பயிற்சி ஆட்டத்தில் கூட சேர்க்கப்படவில்லை. இந்த நிலையில், கருண் நாயர் போன்ற வீரர்கள் கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடி தங்களது திறமையை நிரூபித்து இந்திய அணிக்கு திரும்பிய நிலையில், ருதுராஜும் அதே போல் ஒரு வழியை பின்பற்ற போகிறார்.