மும்பை: சிறப்பான ஃபார்மில் உள்ள ருத்துராஜ் கெய்க்வாட்டை நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் அணித் தேர்வில் நீக்கியதற்காக இந்திய அணி நிர்வாகத்தை முன்னாள் தொடக்க வீரர் ஸ்ரீகாந்த், கடுமையாக சாடினார்.கடந்த 2025 டிசம்பரில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக தனது கடைசி ஒருநாள் போட்டியில் 83 பந்துகளில் 105 ரன்கள் குவித்து சதம் அடித்தார் கெய்க்வாட். இருப்பினும், ஸ்ரேயாஸ் ஐயர் அணிக்கு திரும்புவதால், ருதுராஜ் 15 பேர் கொண்ட இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
ருதுராஜின் இத்தகைய நீக்கம் குறித்து தனது யூடியூப் சேனலில் பேசிய ஸ்ரீகாந்த், “தோனியுடன் விளையாடியதால் விக்கெட் கீப்பிங் செய்ய முடியும் என்று ருதுராஜ் கூறினால் மட்டுமே அவருக்கு அணியில் வாய்ப்பு கிடைக்கும்” என கேலி செய்தார். மேலும், “ஸ்ரேயாஸ் ஐயர் நிச்சயம் இருந்திருக்க வேண்டும். ஆனால் ருத்துராஜ் 15 பேர் கொண்ட அணியில் இருந்திருக்க வேண்டும். நிதிஷ் குமார் ரெட்டிக்கு பதிலாக அவரை வைத்திருக்கலாம்” என்றும் வலியுறுத்தினார்.

நடப்பு 2025-26 விஜய் ஹசாரே டிராபியில் கெய்க்வாட் ஐந்து போட்டிகளில் 64-க்கு அதிகமான சராசரியுடன் 257 ரன்கள் குவித்துள்ளார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 120.65 ஆகும். “சதம் அடித்தாலும் வாய்ப்பில்லை என இது காட்டுகிறது. கெய்க்வாட் மீண்டும் புதிதாகத் தொடங்கி மலைபோல் ரன்கள் குவிக்க வேண்டும்” என்றார் ஸ்ரீகாந்த்.
ருத்துராஜ் கெய்க்வாட்டை நியூசிலாந்து தொடரில் இருந்து நீக்கியது நீண்டகால விளைவுகளை ஏற்படுத்தும் என்று ஸ்ரீகாந்த் கருதுகிறார். யஷஸ்வி ஜெய்ஸ்வாலைப் போலவே கெய்க்வாட்டும் விளையாடும் பதினொரு பேரில் இல்லையென்றாலும், 15 பேர் கொண்ட அணியிலாவது இருந்திருக்க வேண்டும் என்றார்.
மேலும் அவர், “அணியிலிருந்தே நீக்கப்பட்டால், ஒரு சர்வதேசப் போட்டியில் காட்டிய செயல்பாடு வீணாகிறது. சதம் அடித்ததை விரைவில் மறந்துவிடுவார்கள். ஏனெனில் அனைவருக்கும் ஞாபக சக்தி குறைவு” என தனது ஆதங்கத்தைப் பதிவு செய்தார்.இந்த சர்ச்சைகள் ஒருபுறமிருக்க, நியூசிலாந்துக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டிகளில் முதல் போட்டி ஜனவரி 11 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வதோதராவில் நடைபெறும்.