திருவனந்தபுரம்: கேரளா அணிக்கு எதிரான ரஞ்சி டிராபி போட்டியில் மகாராஷ்டிரா அணி 18 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தவித்த நிலையில், நட்சத்திர வீரர் ருதுராஜ் கெய்க்வாட் தனியாளாக போராடி அணியை மீட்டெடுத்துள்ளார். சிறப்பாக ஆடிய அவர் 91 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ருதுராஜ் கெய்க்வாட்டின் கிரிக்கெட் வாழ்க்கையில் மிகச்சிறந்த இன்னிங்ஸில் ஒன்றாக இது அமைந்துள்ளது.
ஐபிஎல் தொடரின் போது சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக விலகினார். இதன்பின் இந்திய ஏ அணிக்காக விளையாட இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டாலும், ருதுராஜ் கெய்க்வாட்க்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இதன்பின் கவுண்டி கிரிக்கெட்டில் விளையாட ருதுராஜ் ஒப்பந்தம் செய்யப்பட்ட சூழலில், சொந்த காரணங்கள் காரணமாக விலகினார்.

இந்த நிலையில் புச்சி பாபு தொடரில் ருதுராஜ் கெய்க்வாட் கம்பேக் கொடுத்தார். சிறந்த ஃபார்மில் இருந்த அவர், தற்போது ரஞ்சி டிராபி தொடரில் விளையாடி வருகிறார். இன்றைய ஆட்டத்தில் கேரளா அணிக்கு எதிரான போட்டியில் மகாராஷ்டிரா அணி விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற கேரளா அணியின் கேப்டன் அசாரூதீன் பவுலிங்கை தேர்வு செய்தார்.
மகாராஷ்டிரா அணிக்காக பிரித்வி ஷா - அர்ஷின் குல்கர்னி தொடக்கம் கொடுத்தனர். இதில் முதல் ஓவரிலேயே பிரித்வி ஷா டக் அவுட்டாகி வெளியேற, அடுத்த பந்திலேயே சித்தேஷ் வீர் டக் அவுட்டாகினார். தொடர்ந்து 2வது ஓவரின் முதல் பந்தில் அர்ஷின் குல்கர்னி ஆட்டமிழந்தார். பின்னர் வந்த கேப்டன் அன்கித் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழக்க, மகாராஷ்டிரா அணி 5 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது.
அந்த 5 ரன்களும் ஒய்டு மூலமாக வந்தது. தொடர்ந்து ருதுராஜ் கெய்க்வாட் ஒரு பக்கம் நிற்க, சவுரவ் நவாலே 12 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனால் மகாராஷ்டிரா அணி 18 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது. பின்னர் அனுபவ வீரரான ஜலஜ் சக்சேனாவை எதிர் முனையில் வைத்து கொண்டு ருதுராஜ் கெய்க்வாட் மொத்த பொறுப்பையும் ஏற்றுக் கொண்டு களத்தில் நின்றார்.
சிறப்பாக ஆடிய அவர், மகாராஷ்டிரா அணியின் ஸ்கோரை 150 ரன்களை கடந்து அழைத்து சென்றார். 90 ரன்களை கடந்த போது, ருதுராஜ் கெய்க்வாட் சதம் அடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆனால் 91 ரன்களில் ருதுராஜ் கெய்க்வாட் ஆட்டமிழந்து வெளியேறினார். ருதுராஜ் கெய்க்வாட்க்கு பெயர் சொல்லும் இன்னிங்ஸாக இது அமைந்துள்ளது. முதல் நாளில் மகாராஅஷ்டிரா அணி 7 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளது.