திருவனந்தபுரம்: கேரளா அணிக்கு எதிரான ரஞ்சி டிராபி போட்டியில் மகாராஷ்டிரா அணியின் நட்சத்திர வீரர் ருதுராஜ் கெய்க்வாட் இரு இன்னிங்ஸிலும் அரைசதம் விளாசி அசத்தி இருக்கிறார். இதனால் ஆட்டம் டிராவில் முடிவடைந்தாலும், முதல் இன்னிங்ஸ் முன்னிலை அடிப்படையில் ருதுராஜ் கெய்க்வாட்-க்கு ஆட்டநாயகன் விருது அளிக்கப்பட்டுள்ளது.
அண்மைக் காலமாக சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் அதிக கவனம் பெற்று வருகிறது. ஐபிஎல் தொடரில் காயம் அடைந்து விலகிய ருதுராஜ் கெய்க்வாட், அதன்பின் ஆடிய புச்சி பாபு, துலீப் டிராபி ஆகிய தொடர்களில் சதம் விளாசி அசத்தினார். அதிலும் துலீப் டிராபியில் ருதுராஜ் கெய்க்வாட் ஆடிய ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் பாராட்டுக்களை பெற்றது.

ஆனால் இந்திய டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணியில் இடம்பிடிக்க வேண்டுமென்றால், ரஞ்சி டிராபியில் ருதுராஜ் கெய்க்வாட் சிறப்பாக விளையாட வேண்டிய தேவை ஏற்பட்டது. இம்முறை மகாராஷ்டிரா அணியின் கேப்டன் பதவியில் இருந்து ருதுராஜ் கெய்க்வாட் விடுவிக்கப்பட்டிருந்தார். இதனால் தொடக்க வீரராக அல்லாமல் நம்பர் 4 பேட்ஸ்மேனாக ருதுராஜ் கெய்க்வாட் ஆடினார்.
கேரளா அணிக்கு எதிரான ரஞ்சி டிராபி போட்டியின் முதல் இன்னிங்ஸில் மகாராஷ்டிரா அணி 18 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அப்போது தனியாளாக நின்று ருதுராஜ் கெய்க்வாட் 91 ரன்களை விளாசியதோடு, அணியின் ஸ்கோரையும் உயர்த்தினார். இதனால் முதல் இன்னிங்ஸில் மகாராஷ்டிரா அணி 239 ரன்களை எடுத்தது. பின் களமிறங்கிய கேரளா அணி 219 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது.
இதனால் 20 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய மகாராஷ்டிரா அணி 2வது இன்னிங்ஸில் மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியது. தொடக்க வீரர் பிரித்வி ஷா 75 ரன்களை எடுத்து ஆட்டமிழக்க, சித்தேஷ் வீர் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் இருவரும் தலா 55 ரன்களையும் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இதையடுத்து ஆட்டம் டிராவில் முடிவடைந்தது.
இரு இன்னிங்ஸிலும் சிறப்பாக விளையாடி அரைசதம் விளாசிய ருதுராஜ் கெய்க்வாட்க்கு ஆட்டநாயகன் விருது அளிக்கப்பட்டது. ரஞ்சி டிராபி தொடரை மிகச்சிறப்பாக ருதுராஜ் கெய்க்வாட் தொடங்கி இருக்கிறார். இந்த சீசனில் இன்னும் சில மறக்க முடியாத இன்னிங்ஸை ஆடிவிட்டால், இந்திய டெஸ்ட் அணிக்குள் மீண்டும் இடம்பிடிக்க முடியும் என்று பார்க்கப்படுகிறது.