மொஹாலி: பெங்கால் அணிக்கு எதிரான சையத் முஷ்டாக் அலி தொடரில் மகாராஷ்டிரா அணிக்காக ஆடிய ருதுராஜ் கெய்க்வாட் 22 பந்துகளில் அரைசதம் விளாசி அசத்தியுள்ளார்.
நடப்பாண்டுக்கான ஐபிஎல் தொடரில் 15 இன்னிங்ஸ்களில் விளையாடி 590 ரன்களை குவித்தனர் ருதுராஜ் கெய்க்வாட். சென்னை அணி 5வது முறையாக கோப்பையை வெல்வதற்கு முக்கிய காரணமாக அமைந்தார். ஐபிஎல் தொடரில் அபாரமான ஃபார்மில் ஆடிய அவருக்கு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் மாற்று வீரருக்கான பட்டியலில் இடம் கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் ருதுராஜ் கெய்க்வாட்-க்கு இடம் கிடைத்தது. அதில் போதுமான வாய்ப்புகள் கிடைக்காவிட்டாலும், அயர்லார்ந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டார். வாய்ப்பை பயன்படுத்தி கொண்ட அவர், ஆசிய போட்டிகளில் இந்திய அணியை வழிநடத்தி தங்கப்பதக்கத்தை வென்றார்.
இதனிடையே ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் ஆட்டம் வேற லெவலில் இருந்தது. அண்மை காலமாக சிறந்த பேட்டிங் ஃபார்மில் இருக்கும் ருதுராஜ், அந்த ஃபார்மை உள்ளூர் கிரிக்கெட் தொடர்களிலும் தொடர்ந்து வருகிறார். சையத் முஷ்டாக் அலி கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதில் மகாராஷ்டிரா அணிக்காக ருதுராஜ் கெய்க்வாட் களமிறங்கினார். இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய பெங்கால் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 158 ரன்கள் சேர்க்கப்பட்டது. அதிகபட்சமாக ரஞ்ஜோத் சிங் 49 ரன்களும், சுதீப் 44 ரன்களும் விளாசினர். இதன்பின் மகாராஷ்டிரா அணி தரப்பில் ருதுராஜ் - அர்ஷின் கூட்டணி களமிறங்கியது. தொடக்கம் முதலே ருதுராஜ் கெய்க்வாட் அதிரடியில் மிரட்டினார். சிறப்பாக ஆடிய ருதுராஜ் கெய்க்வாட் 22 பந்துகளில் 7 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸ் உட்பட அரைசதம் விளாசினார்.
இவரின் அதிரடி காரணமாக 10 ஓவர்களிலேயே மகாராஷ்டிரா அணியின் ஸ்கோர் 10 ஓவர்களில் 118 ரன்களாக இருந்தது. தொடர்ந்து அதிரடியாக ஆடிய ருதுராஜ் கெய்க்வாட் சதம் விளாசுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 40 பந்துகளில் 4 சிக்ஸ் மற்றும் 9 பவுண்டரியுடன் 82 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ருதுராஜ் கெய்க்வாட் தொடர்ச்சியாக சிறப்பாக விளையாடி வருவது விரைவில் இந்திய அணியின் நிரந்தர வீரராக இருப்பார் என்ற நம்பிக்கை ரசிகர்களிடையே ஏற்படுத்தியுள்ளது.