ஜெய்ப்பூர்: நியூசிலாந்து தொடருக்கான இந்திய அணியில் இடம் மறுக்கப்பட்ட நிலையில், சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தனது பேட் மூலம் தேர்வுக்குழுவுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார். விஜய் ஹசாரே கோப்பையில் சதம் விளாசிய அவர், ஆஸ்திரேலிய ஜாம்பவான் மைக்கேல் பெவனின் நீண்ட காலச் சாதனையைத் தகர்த்தெறிந்து, உலக அளவில் புதிய வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.
சமீபத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் தனது முதல் சதத்தைப் பதிவு செய்திருந்தும், நியூசிலாந்து தொடருக்கான இந்திய அணியிலிருந்து ருதுராஜ் கெய்க்வாட் நீக்கப்பட்டார். இது ரசிகர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. இந்தச் சூழலில், விஜய் ஹசாரே கோப்பையில் மகாராஷ்டிர அணிக்காக விளையாடி வரும் அவர், தனது ஆக்ரோஷமான ஆட்டத்தின் மூலம் தன்னை நிரூபித்துள்ளார்.

வியாழக்கிழமை ஜெய்ப்பூரில் நடைபெற்ற கோவா அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில், ருதுராஜ் கெய்க்வாட் அபாரமாக விளையாடி 131 பந்துகளில் 134 ரன்களைக் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதில் 8 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்கள் அடித்து இருந்தார்.
இந்த இன்னிங்ஸ் மூலம், உள்ளூர் ஒருநாள் போட்டிகளில் (List A Cricket) உலகிலேயே அதிக பேட்டிங் சராசரி கொண்ட வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார். ஆஸ்திரேலிய ஜாம்பவான் மைக்கேல் பெவன் 57.86 என்ற சராசரி வைத்து இருந்ததே முந்தைய சாதனை ஆகும்.
தற்போது அதை முறியடித்து இருக்கும் ருதுராஜ் கெய்க்வாட் 58.83 என்ற பேட்டிங் சராசரியை வைத்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் 'ஃபினிஷர்'களுக்கெல்லாம் முன்னோடியான மைக்கேல் பெவனின் சாதனையை ஒரு இந்திய வீரர் முறியடித்திருப்பது சாதாரண விஷயம் அல்ல.
இந்த ஒரே போட்டியில் ருதுராஜ் இன்னும் சில சாதனைகளையும் படைத்துள்ளார். லிஸ்ட் ஏ போட்டிகளில் அதிவேகமாக 20 சதங்களை அடித்த வீரர் என்ற சாதனையை ருதுராஜ் படைத்துள்ளார். அவர் இதை வெறும் 99 இன்னிங்ஸ்களில் சாதித்துள்ளார். அதேபோல், அதிவேகமாக 5,000 ரன்களைக் கடந்த வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றார்.
விஜய் ஹசாரே கோப்பை வரலாற்றில் அதிக சதங்கள் (15) அடித்த வீரர் என்ற சாதனையை, சக வீரர் அங்கித் பாவ்னேவுடன் சமன் செய்தார். பாவ்னே 101 போட்டிகளில் இந்தச் சாதனையைச் செய்ய, ருதுராஜ் வெறும் 59 போட்டிகளிலேயே இதை நிகழ்த்தியுள்ளார்.
இந்திய அணியில் வாய்ப்பு மறுக்கப்பட்ட ஒவ்வொரு முறையும், உள்ளூர் போட்டிகளில் ரன் மழை பொழிந்து தேர்வாளர்களுக்குத் தலைவலி கொடுப்பதை ருதுராஜ் வாடிக்கையாகக் கொண்டுள்ளார்.