ராஜ்கோட்: தென்னாப்பிரிக்கா ஏ அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய ஏ அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. தென்னாப்பிரிக்கா ஏ அணி 133 ரன்களை மட்டுமே இலக்காக நிர்ணயித்த நிலையில், ருதுராஜ் கெய்க்வாட் அரைசதம் அடித்து இந்திய ஏ அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்றுள்ளார்.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்கா ஏ அணி 2 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. ஏற்கனவே டெஸ்ட் தொடர் 1-1 என்று சமனில் முடிவடைந்த நிலையில், தற்போது ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது. ஏற்கனவே முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியை ருதுராஜ் கெய்க்வாட் சிறப்பான சதம் மூலமாக வெற்றிபெற வைத்தார்.

இந்த நிலையில் 2வது ஒருநாள் போட்டி ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய தென்னாப்பிரிக்கா ஏ அணி 30.3 ஓவர்களில் 132 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியது. சிறப்பாக பவுலிங் செய்த நிஷாந்த் சிந்து 4 விக்கெட்டுகளையும், ஹர்சித் ராணா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.
இதையடுத்து இந்திய அணிக்காக ருதுராஜ் கெய்க்வாட் - அபிஷேக் சர்மா கூட்டணி தொடக்கம் கொடுத்தது. அதிரடியாக ஆடிய அபிஷேக் சர்மா 22 பந்துகளில் 32 ரன்களில் ஆட்டமிழந்தார். மறுபக்கம் ருதுராஜ் கெய்க்வாட் - திலக் வர்மா கூட்டணி நிதானமாக ரன்களை சேர்த்தது. சிறப்பாக ஆடிய ருதுராஜ் கெய்க்வாட் அரைசதம் கடந்து அசத்தினார்.
இறுதியாக இந்திய ஏ அணி 27.5 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் எடுத்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. சிறப்பாக ஆடிய ருதுராஜ் கெய்க்வாட் 83 பந்துகளில் 68 ரன்களையும், திலக் வர்மா 62 பந்துகளில் 29 ரன்களையும் எடுத்தனர். முதல் ஒருநாள் போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் சதம் விளாசிய நிலையில், 2வது ஒருநாள் போட்டியில் அரைசதம் அடித்து நாட் அவுட் பேட்ஸ்மேனாக அசத்தியுள்ளார்.
ஏற்கனவே புச்சி பாபு, துலீப் டிராபி, ரஞ்சி டிராபி, இந்தியா ஏ அணிகளுக்காக ஒவ்வொரு தொடர்களிலும் சதம் விளாசியுள்ள ருதுராஜ் கெய்க்வாட், தற்போது லிஸ்ட் ஏ போட்டிகளிலும் கன்சிஸ்டன்சியுடன் விளையாடி ரன்கள் சேர்த்துள்ளார். இதனால் ருதுராஜ் கெய்க்வாட் விரைவில் இந்திய அணிக்குள் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.