ஜோகன்னஸ்பர்க்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் செல்லப் பிள்ளையான டெவால்ட் பிரெவிஸ்-ஐ SA20 (எஸ்ஏ 20) டி20 லீக் தொடரின் ஏலத்தில் தட்டி தூக்கி இருக்கிறது டெல்லி கேப்பிடல்ஸ். அவரை வாங்க பெரும் தொகையை செலவு செய்ய முன் வந்தும் கங்குலி விடாப்பிடியாக நின்றதால் சிஎஸ்கே நிர்வாகத்தால் அவரை வாங்க முடியவில்லை.
இதனை அடுத்து தென்னாப்பிரிக்காவின் இளம் அதிரடி வீரரும், 'பேபி ஏபி' என்று செல்லமாக அழைக்கப்படுபவருமான டெவால்ட் பிரெவிஸ், SA20 லீக் வரலாற்றில் மிக அதிக விலைக்கு ஏலம் போன வீரர் என்ற பிரம்மாண்டமான சாதனையைப் படைத்துள்ளார். பிரிட்டோரியா கேப்பிடல்ஸ் அணி இவரை சுமார் ரூ. 8.31 கோடிக்கு (R16.5 மில்லியன்) ஒப்பந்தம் செய்துள்ளது. இது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அவர் பெறும் ஐபிஎல் சம்பளத்தை விட இரண்டு மடங்குக்கும் அதிகமாகும்.
தென்னாப்பிரிக்காவின் வளர்ந்து வரும் டி20 லீக்கான SA20-ன் நான்காவது சீசனுக்கான ஏலம் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது. அதில் தான் இந்த வரலாற்று ஏல நிகழ்வு அரங்கேறியுள்ளது.

இந்த ஏலத்தின் போது டெவால்ட் பிரெவிஸ் பெயர் வருவதற்குச் சில நிமிடங்களுக்கு முன்புதான், மூத்த வீரர் ஐடன் மார்க்ரமை டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி R14 மில்லியனுக்கு (சுமார் 7 கோடி) வாங்கியது. அதுவே அப்போதைய சாதனையாக இருந்தது. ஆனால், அந்தச் சாதனை நிகழ்ந்த சில நிமிடங்களில், டெவால்ட்பிரெவிஸுக்காக பிரிட்டோரியா கேப்பிடல்ஸ் மற்றும் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் (JSK) அணிகள் இடையே நடந்த கடும் போட்டி, மார்க்ரமின் சாதனையைத் தவிடுபொடியாக்கியது.
குறிப்பாக, ஐபிஎல்-ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சகோதர அணியான ஜோபர்க் சூப்பர் கிங்ஸ், பிரெவிஸுக்காக R16.4 மில்லியன் வரை ஏலத் தொகையை உயர்த்தி கடுமையாகப் போராடியது. இது அவர்களின் மொத்த பட்ஜெட்டில் பெரும் பகுதியாகும். சமீபத்திய ஐபிஎல் சீசனில், மாற்று வீரராக சிஎஸ்கே-வுக்காகக் களமிறங்கிய பிரெவிஸ், 6 இன்னிங்ஸ்களில் 180 என்ற மிரட்டலான ஸ்டிரைக் ரேட்டில் 225 ரன்கள் விளாசியதே JSK-வின் இந்த தீவிர முயற்சிக்குக் காரணம்.
பிரிட்டோரியா கேப்பிடல்ஸ் அணி, ஐபிஎல்-ல் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் சகோதர அணியாகும். டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் 2025 ஐபிஎல் சீசனில் டெவால்ட் பிரெவிஸை மாற்று வீரராக ஒப்பந்தம் செய்ய முயன்றது. ஆனால், பிரெவிஸ் சிஎஸ்கே-வுக்கு முன்னுரிமை அளித்தார். தற்போது, பிரிட்டோரியா கேப்பிடல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளரான சௌரவ் கங்குலி, சிஎஸ்கே-வுக்கு இங்கே பதிலடி கொடுத்ததில் மகிழ்ச்சி அடைந்திருப்பார்.
இதுகுறித்து கங்குலி கூறுகையில், "டெவால்ட் பிரெவிஸ் ஒரு திறமைசாலி என்று நான் நினைக்கிறேன். கடந்த ஒன்றரை ஆண்டுகளில் அவரது ஆட்டம் அபாரமாக முன்னேறியுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் அவர் ஒரு 'கேம்-சேஞ்சர்' என்பதைக் காட்டினார். டி20 கிரிக்கெட்டில் அதுதான் உங்களுக்குத் தேவை. பணத்தை ஒதுக்கி வைத்துவிட்டுப் பார்த்தால், அவர் ஒரு அற்புதமான வீரர். சுழற்பந்து வீச்சை மிகச் சிறப்பாக ஆடுகிறார், இது மிகவும் முக்கியம். இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் அவர் இந்த விலைக்குச் சென்றுள்ளார்" என்றார்.
இங்கு டெவால்ட் பிரெவிஸ்-க்கு பெரும் தொகை அளிக்கப்பட்டாலும் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் காயம் காரணமாக விலகிய குர்ஜப்னீத் சிங்கிற்கு மாற்று வீரராக டெவால்ட் பிரெவிஸ்-ஐ வெறும் ₹3 கோடிக்கு மட்டுமே ஒப்பந்தம் செய்தது. ஆனால், ஐபிஎல்லை விட சிறிய மற்றும் புதிய லீக்கான SA20-ல், அவரது வருமானம் இரண்டு மடங்குக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.
பிரெவிஸின் ஆதர்ச நாயகனான ஏபி டி வில்லியர்ஸ், பிரெவிஸ் சற்று ஃபார்ம் இல்லாமல் இருந்தபோது, அவர் மீது நம்பிக்கை வைத்து சிஎஸ்கே அணி அவரைத் ஐபிஎல் தொடரில் தேர்வு செய்தது தோனியின் ஒரு 'மாஸ்டர் கிளாஸ்' என்று பாராட்டியிருந்தார்.
தற்போது பிரெவிஸ் தனது ஆட்டத்தில் சில மாற்றங்களைச் செய்து, இந்த ஆண்டு மிகச்சிறந்த ஃபார்மில் உள்ளார். 2025-ல் இதுவரை 5 ஒருநாள் போட்டிகளில் 182.4 ஸ்டிரைக் ரேட்டிலும், 8 டி20 போட்டிகளில் 196.8 என்ற அசுரத்தனமான ஸ்டிரைக் ரேட்டிலும் ரன்களைக் குவித்துள்ளார். அவரது சமீபத்திய அதிரடி ஆட்டமே, இந்த ஜாக்பாட் விலைக்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.