SA 20 JSK : தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வரும் எஸ்ஏ 20 தொடரில் வாழ்வா சாவா என்ற போட்டியில் களம் இறங்கிய ஜோகனஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்று ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. டாஸ் வென்ற ஜோகனஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதனை அடுத்து களமிறங்கிய டர்பன் சூப்பர் ஜெயின்ஸ் அணியின் ஜேஜே ஸ்மர்ஸ்ட்ஸ் மற்றும் வியான் முல்டர் ஆகியோர் அபாரமாக விளையாடி அரைசதம் அடித்து அந்த அணி ஆறு விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் எடுத்தது.

இதனை எடுத்து 204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சூப்பர் கிங்ஸ் அணியில் வழக்கம் போல் கேப்டன் டுபிளசிஸ் மற்றும் டுபிளாய் ஆகியோர் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்க்க இறுதியில் வெயின் மேட்சன் 44 ரன்கள் அடிக்க ஜே எஸ் கே அணி ஒரு பந்து எஞ்சிய நிலையில் வெற்றியை பெற்றது.
இந்த நிலையில் ஜே எஸ் கே அணியில் தொடக்க வீரர் டுபிளசிஸ் அதிரடியாக விளையாடி போனஸ் புள்ளிகளை பெற வேண்டும் என்ற நோக்கத்தில் ரன்களை சேர்த்து வந்தார். தன்னுடைய வழக்கமான அதிரடி ஆட்டத்தால் ஏழு பவுண்டரிகள், 3 சிக்சர்கள் என பறக்க விட்டார். இது மூலம் டுபிளசிஸ் 24 பந்துகளிலே அரை சதம் கடந்தார்.
டுபிளசிஸ் 57 ரன்கள் எடுத்திருந்தபோது நூர் முகமது வீசிய பந்து அவர் காலில் பட்டது. இதற்கு டர்பன் வீரர்கள் அவுட் கேட்க நடுவரும் அவுட் வழங்கினார். இதனை கொஞ்சம் கூட எதிர்பார்க்காத டுபிளசிஸ் டி.ஆர்.எஸ் மூலம் மூன்றாம் நடுவரின் உதவியை நாடினார். டி ஆர் எஸ் கிராபிக்ஸ் பரிசோதனை செய்த போது பந்து ஸ்டெம்பின் லைனில் பட்டு காலில் தாக்கியதாக கிராபிக்ஸ் காட்சிகள் கணித்தது.
இதன் மூலம் மூன்றாம் நடுவர் அதற்கு அவுட் வழங்கி விட்டார். எனினும் வலது கை பேட்ஸ்மேனுக்கு இடதுபுறத்தில் இருந்து வந்து பந்து வீசும் போது அது ஸ்டெம்பின் லைனில் பட வாய்ப்பு இல்லை. மேலும் நூர் முகமது வீசிய அந்த பந்து ஸ்டெம்பின் லைனில் பட்டு இருக்காது. அப்படி இருந்தால் அதனை நாட் அவுட் என்று தான் நடுவர்கள் சொல்வார்கள்.
ஆனால் கிராபிக்ஸ் காட்சிகள் பந்து ஸ்டெம்பின் லைனில் பட்டது போல் தவறாக காட்டப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. இது குறித்து தமிழக கிரிக்கெட் வல்லுனர் பிரசன்னா, இந்த பந்து எப்படி ஸ்டம்ப் லைனில் பட்டிருக்கும். அதற்கு வாய்ப்பே இல்லை என்று தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். தென்னாப்பிரிக்காவில் இதுபோன்று நடைபெறுவது இது முதல் முறை அல்ல.
ஏற்கனவே இந்தியாவும் தென்னாபிரிக்காவும் 2021- 22 ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் விளையாடிய போது ஸ்டெம்பில் பட வேண்டிய பந்தை கிராபிக்ஸில் மாற்றி காட்டி ஏமாற்றினர். இதேபோன்று பலமுறை டி ஆர் எஸ் இல் அவர்கள் தங்களுடைய கைவேலையை காட்டியிருக்கிறார்கள். தற்போது ஜே எஸ் கே அணி வெற்றி பெற்று விடக்கூடாது என்பதற்காக டுபிளசிஸ் தவறாக கிராபிக்ஸ் காட்சிகளை காட்டி ஆட்டமிழக்க வைத்ததாக ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இது குறித்து ஐசிசி விசாரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டிருக்கிறது.