மும்பை: தென் ஆப்பிரிக்காவின் மிகப் பெரிய ஸ்கோரை சேஸ் செய்த இந்தியாவால், பரிதாபத் தோல்வியை மட்டுமே தழுவ முடிந்தது.
அஜிங்கியா ரஹானேவும், ஷிகர் தவானும் களத்தில் இருந்தவரை சற்று நம்பிக்கை இருந்தது. ஆனால் அடுத்தடுத்து இருவரும் பிரிந்ததும் ஆட்டத்தில் சுவாரஸ்யம் போய் விட்டது. அவர்களைத் தொடர்ந்து வந்தவர்கள் சரிவர ஆட முயற்சிக்கவில்லை.

இந்திய அணியின் பந்து வீச்சாளர்கள் முன்னதாக பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்தனர் என்றால், பேட்டிங்கில் ரஹானே, தவானைத் தவிர மற்றவர்கள் பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்து விட்டனர்.
439 என்ற மிகப் பெரிய இலக்கை இந்தியா சேஸ் செய்து வந்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் ரோஹித் சர்மாவும், ஷிகர் தவானும் நன்றாகவே ஆரம்பித்தனர். ரோஹித் 16 ரன்களில் வீழ்ந்ததும். தொடர்ந்து வந்த கோஹ்லியும் 7 ரன்களில் பெவிலியன் திரும்பி விட்டார்.
அதன் பின்னர் ஜோடி சேர்ந்த தவானும், ரஹானேவும் பட்டையைக் கிளப்பி விட்டனர். ரஹானேவி்ன் ஆட்டத்தில் பொறி பறந்தது. அவர் ஆடிய வேகத தைப் பார்த்தபோது ரசிகர்களுக்கு பெரும் நம்பிக்கை பிறந்தது.
மின்னல் வேகத்தில் ஆடிய ரஹானே 58 பந்துகளில் 87 ரன்களைக் குவித்து ஆட்டமிழந்து போனார். மறுபக்கம் தவான் அவருக்கு முன்னதாக 60 ரன்களில் வீழ்ந்தார்.
இவர்களோடு ஆட்டமும் சேர்ந்து சோபையிழந்து போனது. பிறகு வந்தவர்களில் கேப்டன் டோணி மட்டும் சற்றுச் சொல்லிக் கொள்ளும்படி ஆடினார். 29 பந்துகளைச் சந்தித்து 27 ர ்களை எடுத்து ஆட்டமிழந்தார் டோணி.
பெரிய ஸ்கோரை சேஸ் செய்ய முடியாமல் திணறிய இந்தியா கடைசியில் 36 ஓவர்களில் 224 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 214 ரன்கள் என்ற வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது.
முதல் தொடர் வெற்றி
இந்த வெற்றி மூலம் ஒரு நாள் போட்டித் தொடரை 3-2 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்கா வென்றது. இந்தியாவில் ஒரு நாள் போட்டித் தொடரை அது வெல்வது இதுவே முதல் முறை என்பதால் இது வரலாற்றுச் சிறப்பு வாய்ந்ததாக மாறியுள்ளது.
ஏற்கனவே அது டுவென்டி 20- தொடரையும் வென்றிருந்தது நினைவிருக்கலாம்.