சார்ட்டர்ட் விமானம் மூலம் பயணம்
ஐபிஎல் போட்டிகளையொட்டி வரும் 21ம் தேதி சார்ட்டர்ட் விமானம் மூலம் சிஎஸ்கே வீரர்கள் யூஏஇக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளனர். வரும் செப்டம்பர் 19ம் தேதி முதல் நவம்பர் 10ம் தேதிவரை ஐபிஎல் 2020 போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில், சிஎஸ்கேவை சேர்ந்த வெளிநாட்டு வீரர்கள் மிகவும் தாமதமாகவே அணியில் இணைவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
செப்டம்பர் 1ம் தேதி இணைகிறார்கள்
வரும் செப்டம்பர் 1ம் தேதி தென்னாப்பிரிக்காவின் பாப் டூ பிளசிஸ் மற்றும் பௌலர் லுங்கி நிகிடி ஆகியோர் அணியில் இணையவுள்ளனர். ஆனால் ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் ஷேன் வாட்சன், கோச் ஸ்டீபன் பிளமிங் மற்றும் பேட்டிங் கோச் மைக் ஹஸ்ஸி ஆகியோர் வரும் 22ம் தேதியே இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மேற்கிந்திய தீவுகள் வீரர்கள் தாமதம்
டிவைன் பிராவோ, மிட்செல் சான்ட்னர் மற்றும் இம்ரான் தாஹிர் ஆகிய வீரர்கள் கரீபியன் பிரீமியர் லீக்கில் விளையாடவுள்ளதால் அவர்கள் எப்போது ஐபிஎல் போட்டிகளுக்காக யூஏஇக்கு பயணம் மேற்கொள்வார்கள் என்பதும் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. வரும் 28ம் தேதி கரீபியன் பிரீமியர் லீக் தொடர் துவங்கவுள்ள நிலையில் இந்த வீரர்கள் தற்போது குவாரன்டைனில் ஈடுபட்டுள்ளனர்.
அணி வீரர்கள் தாமதம்
இதேபோல இங்கிலாந்து -ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரில் விளையாடவுள்ள ஆஸ்திரேலிய பௌலர் ஜோஷ் ஹாசல்வுட் மற்றும் இங்கிலாந்து ஆல்ரவுண்டர் சாம் குர்ரான் ஆகியோர் செப்டம்பர் மாத மத்தியில்தான் சிஎஸ்கே அணிக்காக விளையாட வருவார்கள் என்று கூறப்படுகிறது. இதனால் சிஎஸ்கே தனது ஆரம்ப போட்டிகளில் வெளிநாட்டு வீரர்கள் இல்லாமல்தான் விளையாடும் என்று கூறப்பட்டுள்ளது.