டர்பன்: தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வரும் எஸ்ஏ டி20 தொடரின் இரண்டாவது போட்டியை பார்க்க சென்ற ரசிகர் ஒருவருக்கு 2 மில்லியன் ரான்ட் (Rand) பரிசுத் தொகையாக கிடைத்துள்ளது. இந்திய மதிப்புப் படி சுமார் 90 லட்சம் ரூபாயை அந்த ரசிகர் வென்று இருக்கிறார்.
தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வரும் எஸ்ஏ டி20 தொடருக்கு அந்த நாட்டு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. இந்த நிலையில், அந்த தொடரின் போட்டிகளை பார்க்க வரும் ரசிகர்களுக்கு என ஒரு பரிசுப் போட்டி அறிவிக்கப்பட்டது.

எஸ்ஏ டி20 போட்டிகளில் அடிக்கப்படும் சிக்ஸர்களை ரசிகர்கள் ஒற்றை கையால் கேட்ச் பிடித்தால் அவர்களுக்கு ஒரு மில்லியன் ரான்ட், அதாவது இந்திய மதிப்புப்படி 45 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்படும் என அந்த தொடரின் விளம்பரதாரரான பெட்வே என்ற நிறுவனம் அறிவித்து இருந்தது.
மேலும், அந்த கேட்ச்சை பிடிக்கும் ரசிகர் பெட்வே இணையதளத்தில் அல்லது ஆப்-பில் பதிவு செய்து இருந்தால், அவருக்கு இரண்டு மடங்காக பரிசு பணம் அளிக்கப்படும் எனவும் அறிவித்து இருந்தது. அதன்படி அதிகபட்சமாக 90 லட்சம் ரூபாய் வழங்கப்படும் எனக் கூறி இருந்தது.
நேற்று டர்பன் சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் ஆகிய அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் 17 வது ஓவரின் போது டர்பன் சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் வீரர் கேன் வில்லியம்சன் முட்டி போட்டு மிகப்பெரிய சிக்ஸ் ஒன்றை அடித்தார்.
அந்த சிக்ஸரை ரசிகர்கள் அமரும் பகுதியில் இருந்த ரசிகர் ஒருவர் ஒற்றை கையால் கேட்ச் பிடித்தார். அதன் மூலம் அவர் பரிசு பணம் வென்றதை அடுத்து உற்சாகத்தில் துள்ளி குதித்தார். அவர் அந்த இணையதளத்தில் பதிவு செய்து இருந்ததால் அவருக்கு இரண்டு மில்லியன் ரான்ட் (ரூ.90 லட்சம்) பரிசாக அறிவிக்கப்பட்டது.
இது போன்ற பரிசுப் போட்டிகளை ஐபிஎல் தொடரிலும் அறிமுகப்படுத்தப்படுமா? என இந்திய ரசிகர்கள் தங்கள் ஏக்கத்தை வெளிப்படுத்தி உள்ளனர். நேற்று நடந்த போட்டியில் டர்பன் சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி, பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணியை 2 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. கடைசி பந்து வரை அந்த போட்டி விறுவிறுப்பாக சென்றது. அந்த போட்டியை காண வந்திருந்த ரசிகர்கள் கடைசிவரை விறுவிறுப்பாக நடந்த போட்டியை ஆர்வத்துடன் பார்த்து தங்கள் உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.