பார்ல்: தினேஷ் கார்த்திக் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்தும் ஐபிஎல் தொடரில் இருந்தும் ஓய்வு பெற்ற நிலையில், தற்போது புதிய வரலாறு ஒன்றை படைத்து இருக்கிறார். தினேஷ் கார்த்திக் தற்போது தென்னாபிரிக்காவில் நடைபெற்று வரும் எஸ்ஏ டி20 தொடரில் விளையாடி வருகிறார்.
எஸ்ஏ டி 20 தொடரில் இடம் பெற்ற முதல் இந்திய வீரர் என்ற வரலாற்றை படைத்து இருக்கிறார் தினேஷ் கார்த்திக். அவர் எஸ்ஏ டி20 தொடரில் பார்ல் ராயல்ஸ் அணியில் இடம் பெற்று விளையாடி வருகிறார். இந்த ஆண்டு பார்ல் ராயல்ஸ் அணி தனது முதல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியை எதிர்கொண்டது.

அந்தப் போட்டியில் பார்ல் ராயல்ஸ் அணியின் பிளேயிங் லெவனில் தினேஷ் கார்த்திக்கின் பெயர் இடம் பெற்று இருந்தது. இதன் மூலம் எஸ்ஏ டி20 தொடரில் விளையாடிய முதல் இந்திய வீரர் என்ற வரலாற்று நிகழ்வை பதிவு செய்தார் தினேஷ் கார்த்திக்.
தினேஷ் கார்த்திக் இதுவரை 401 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஐபிஎல் தொடரில் அவர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாகவும் இருந்துள்ளார். தற்போது எஸ்ஏ டி20 தொடரில் பார்ல் ராயல்ஸ் அணியில் டேவிட் மில்லரின் கேப்டன்சியில் அவர் களமிறங்கினார். அந்த அணியின் விக்கெட் கீப்பராகவும் அவரே செயல்பட்டார்.
ஐபிஎல் தொடரில் அவர் கடைசியாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடினார். தற்போது அதே பெங்களூரு அணியின் ஆலோசகராகவும் தினேஷ் கார்த்திக் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கிரிக்கெட் வர்ணனையாளராகவும், விமர்சகராகவும் தனக்கென தனி பெயரை பெற்று இருக்கிறார் தினேஷ் கார்த்திக்.
இதனிடையே அவர் எஸ்ஏ டி20 தொடரிலும் விளையாடி வருகிறார். பிசிசிஐ-யின் விதிப்படி இந்திய வீரர் ஒருவர் வெளிநாடுகளில் நடக்கும் டி20 தொடர்களில் விளையாடினால் அதன் பின் இந்தியாவில பிசிசிஐ கட்டுப்பாட்டில் நடைபெறும் எந்த கிரிக்கெட் போட்டியிலும் விளையாட முடியாது.
அதனால், தினேஷ் கார்த்திக் ஐபிஎல் தொடரில் இருந்தும், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்தும் கடந்த 2024 ஐபிஎல் தொடரின் முடிவில் ஓய்வை அறிவித்து இருந்தார். இனி அவர் வர்ணனையாளராக செயல்படுவதோடு அவ்வப்போது இது போன்ற டி20 தொடர்களிலும் விளையாடுவார் என எதிர்பார்க்கலாம்.