ஷார்ஜா : தென்னாப்பிரிக்காவும் ஆப்கானிஸ்தானும் ஐக்கிய அரபு நாடுகளில் மூன்று ஒரு நாள் போட்டி கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் யாருமே எதிர்பாராத வகையில் ஆப்கானிஸ்தான் அணி அபாரமாக விளையாடி முதல் இரண்டு ஒரு நாள் போட்டிகளிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
இந்த நிலையில் மூன்றாவது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் தென் ஆப்பிரிக்க அணி ஆறுதல் வெற்றி பெற்று கப்பலேறிய மானத்தை கொஞ்சமாவது காப்பாற்ற வேண்டும் என்ற உத்வேகத்தில் களமிறங்கியது.

சார்ஜாவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரராக களமிறங்கிய அப்துல் மாலிக் ஒன்பது ரன்களில் ஆட்டம் இழக்க, ரஹ்மத்ஷா 1 ரன்களிலும், கேப்டன் ஹஸ்மதுல்லா ஷாகிதி 10 ரன்களிலும், அஸ்மத்துல்லா உமர்சாய் இரண்டு ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.
ஒரு கட்டத்தில் ஆப்கானிஸ்தான் வீரர்கள் வந்த வேகத்தில் பெவிலின் திரும்பினர். எனினும் தொடக்க வீரர் ரஹ்மனுல்லா குர்பாஸ் தனது வழக்கமான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 94 பந்துகளை எதிர்கொண்ட அவர் 89 ரன்கள் சேர்த்தார். இதில் ஏழு பவுண்டரி, நான்கு இமாலய சிக்சர்கள் அடங்கும்.
இறுதியில் கசன்பர் 15 பந்துகளில் 32 சேர்க்க ஆப்கானிஸ்தான் அணி 34 ஓவர் முடிவில் 169 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. தென்னாப்பிரிக்கா பந்துவீச்சு தரப்பில் லுங்கி கிடி பீட்டர் மற்றும் ஆண்டில் பில்லோக்குவாயோ ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதன் மூலம் 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் தென்னாப்பிரிக்க அணி களம் இறங்கியது.
இரண்டு போட்டிகளில் செய்து தவறை இம்முறை செய்து விடக்கூடாது என்ற நோக்கில் தென்னாபிரிக்க அணி பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. தொடக்க வீரர் டோனி டி சோர்சி 26 ரன்களிலும், கேப்டன் தெம்பா பெவுமா 22 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர். ரீஷா ஹென்றிக்யூஸ் 18 ரன்களில் வெளியேற ஏய்டன் மார்க்கரம் பொறுப்புடன் விளையாடி கடைசி வரை ஆட்டமிழக்காமல் 67 பந்துகளில் 69 ரன்கள் சேர்த்தார். இவருக்கு டிரிஸ்டியன் ஸ்டெப்ஸ் துணை நின்று 42 பந்துகளில் 26 ரன்கள் எடுத்தார்.
இதன் மூலம் தென்னாபிரிக்க அணி 33 ஓவர் முடிவில் மூன்று விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது. இதன் மூலம் ஆப்கானிஸ்தான் அணி தொடரை இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் கைப்பற்றியது. ஆப்கானிஸ்தான் அணி தான் ஒயிட்வாஷ் செய்யும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தென்னாப்பிரிக்கா அணி கடைசி போட்டியில் வென்றிருக்கிறது.