அகமதாபாத்: டி20 உலகக் கோப்பை போட்டியில், ஆப்கானிஸ்தானை 2 சூப்பர் ஓவர்களை எதிர்கொண்டு தென்னாப்பிரிக்க அணி வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது. கிரிக்கெட் ரசிகர்கள் இதனை டி20 உலகக் கோப்பையின் மிகச்சிறந்த கிளாசிக் போட்டிகளில் ஒன்றாக பாராட்டி வருகின்றனர். இந்த ஆட்டம் பல கிரிக்கெட் ஜாம்பவான்களையும் வியக்க வைத்தது.
முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், ராபின் உத்தப்பா, டேல் ஸ்டெய்ன் உள்ளிட்ட பல கிரிக்கெட் பிரபலங்கள் இந்தப் போட்டியை டி20 வரலாற்றின் தலைசிறந்த போட்டிகளில் ஒன்றாகக் குறிப்பிட்டனர். தென்னாப்பிரிக்கா அணி இரண்டு பரபரப்பான சூப்பர் ஓவர்களுக்குப் பிறகு இந்த சூப்பர் வெற்றியைப் பதிவு செய்தது.

"ஒரு நாளைக்கு இரண்டு சூப்பர் ஓவர்கள் சலிப்பை நீக்கும். இறுதி வரை போராடிய போட்டி இது," என சச்சின் டெண்டுல்கர் 'X' தளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், "இந்த வெற்றியின் மூலம் தென்னாப்பிரிக்க அணிக்கு வாழ்த்துகள். இப்படிப்பட்ட அழுத்தமான சூழ்நிலையில் வெற்றி பெறுவதற்கு நிதானம் அவசியம். ஆப்கானிஸ்தான் அணியிடம் அபாயகரமான திறமை உள்ளது," என்றும் அவர் பாராட்டினார்.
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரான ராபின் உத்தப்பா, "நான் இதுவரை பார்த்த டி20 உலகக் கோப்பை போட்டிகளிலேயே இது மிகவும் வெறித்தனமான ஒன்று. ஆப்கானிஸ்தானுக்காகத் தனித்து நின்று போராடிய குர்பாஸுக்காக வருந்துகிறேன். தென்னாப்பிரிக்கா நெருக்கடியான சூழ்நிலையிலும் தங்கள் மன உறுதியைக் காட்டியது பார்க்க அருமையாக இருந்தது. கிரிக்கெட்டுக்கு இது ஒரு அற்புதமான தருணம் என்று பதிவிட்டார்.
இந்தப் போட்டியில் வர்ணனை செய்துகொண்டிருந்த முன்னாள் தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன், "இது உண்மையிலேயே நம்ப முடியாதது என்று வியந்தார். முன்னாள் இந்திய வீரர் இர்ஃபான் பதான், " ஆப்கானிஸ்தான் மிக அருகில் இருக்கிறது. ஆனால் இன்னும் வெகுதூரம் செல்ல வேண்டும் " என்று பாராட்டினார். தென்னாப்பிரிக்காவின் ஜாம்பவான் ஃபாஃப் டு பிளெஸ்ஸிஸ், "என்ன ஒரு ஆட்டம் …!! தென்னாப்பிரிக்கா vs ஆப்கானிஸ்தான்" எனச் சுருக்கமாகப் பதிவிட்டார்.
தென்னாப்பிரிக்க வீரர் தப்ரைஸ் ஷம்ஸி, "ஒரு நடுநிலை ரசிகராக, நீங்கள் இதுவரை பார்த்த சிறந்த போட்டிகளில் இதுவும் ஒன்றா?? கடைசி ஒரு மணி நேரமாக என் இதயத்துடிப்பு உச்சத்தில் இருந்தது," என்று 'X' தளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், போட்டி நடந்துகொண்டிருந்தபோது, "அகமதாபாத்தில் என்னதான் நடக்கிறது. இது ஒரு பைத்தியக்காரத்தனமான ஆட்டம்," என்றும் அவர் பகிர்ந்துகொண்டார்.
குரூப் டி பிரிவில் வெற்றி பெற்றாக வேண்டிய இந்தப் போட்டியில், ஆப்கானிஸ்தான் கேப்டன் ரஷித் கான் டாஸ் வென்று பந்துவீசத் தீர்மானித்தார். ஃபாசல்ஹக் ஃபாரூக்கின் அற்புதமான பந்துவீச்சால் தென்னாப்பிரிக்க கேப்டன் ஐடன் மார்க்ரம் முதல் ஓவரிலேயே வெளியேற்றப்பட்டார். இருப்பினும், குயின்டன் டி காக் 41 பந்துகளில் 59 ரன்கள் மற்றும் ரியான் ரிகல்டன் 28 பந்துகளில் 61 ரன்கள் என இந்த ஜோடி 116 ரன்கள் சேர்த்து ஆதிக்கம் செலுத்தி, தென்னாப்பிரிக்கா 187/6 ரன்கள் எடுக்க உதவியது.
டீவால்ட் பிரெவிஸ் 23 மற்றும் டேவிட் மில்லர் 20* ஆகியோரின் பங்களிப்புகளும், தென்னாப்பிரிக்கா அணியின் ரன் ஸ்கோரை வலுப்படுத்தின. ஆப்கானிஸ்தானின் சேஸிங்கை ரஹ்மத்துல்லா குர்பாஸ் தனது 26 பந்துகளில் ஏழு சிக்ஸர்களுடன் அடித்த அரைசதத்தின் மூலம் முன்னெடுத்தார்.
ஆப்கானிஸ்தான் விரைவாக மூன்று விக்கெட்டுகளை இழந்த போதிலும், அஸ்மத்துல்லா ஓமர்சாய் (22) மற்றும் ரஷித் கான் (20) ஆகியோர் ரன் வேகத்தைப் பராமரித்தனர். இறுதியாக, இரு அணிகளும் தலா 187 ரன்கள் எடுத்து சமன் செய்யவே, ஆட்டம் பரபரப்பான சூப்பர் ஓவருக்குச் சென்றது.முதல் சூப்பர் ஓவரில் ஆப்கானிஸ்தான் 17 ரன்கள் எடுத்தது, ஆனால் தென்னாப்பிரிக்காவும் அதே ரன்களையே எடுத்து மீண்டும் சமன் செய்தது.
இரண்டாவது சூப்பர் ஓவரில், ஸ்டப்ஸ் மற்றும் மில்லர் ஜோடி 23 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. குர்பாஸ் அடுத்தடுத்து மூன்று சிக்ஸர்களை அடித்தார், ஆனால் கேசவ் மகாராஜ் அவரை அவுட்டாக்கி தென்னாப்பிரிக்காவிற்கு வரலாற்று வெற்றியை உறுதி செய்தார்.இந்த போட்டி உலகக் கோப்பை வரலாற்றில் மறக்க முடியாத டி20 போட்டிகளில் ஒன்றாக நினைவுகூரப்படும். இது இரு அணிகளின் அற்புதமான பேட்டிங், பந்துவீச்சு, அதிரடியான அதிரடி மற்றும் நுட்பமான திறமைகளை வெளிப்படுத்தியது.