டரூபா: தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான அரை இறுதிப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி விளையாடிய போது அந்த அணியின் கேப்டன் ரஷித் கான் சக வீரர்களிடம் கோபமாக நடந்து கொண்டார். ஒரு சமயம் கேட்ச்சை தவறவிட்டதாக ஃபீல்டரை திட்டினார். ஆனால், அது கேட்ச் வாய்ப்பே இல்லை. அதை பார்த்து வர்ணனையாளர்கள் சிரித்தனர். அந்த அளவுக்கு ஆக்ரோஷமாக நடந்து கொண்டார் ரஷித் தான்.
2024 டி20 உலக கோப்பை தொடரின் அரை இறுதியில் தென்னாப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் 56 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஆப்கானிஸ்தான் பேட்டிங் செய்தபோது ரஷித் கான் தென்னாப்பிரிக்கா வேகப்பந்துவீச்சாளர் அன்ரிச் நோர்ஜேவை முறைத்து பார்த்து அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதுவும் தேவையற்ற ஒன்றாகவே கருதப்பட்டது. பின்னர் அம்பயர் அன்ரிச்சை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தார்.

அடுத்து ஆப்கானிஸ்தான் அணி 56 ரன்களில் ஆல் அவுட் ஆனதால் கடும் கோபத்தில் இருந்த ரஷித் தான், தென்னாப்பிரிக்கா அணியின் விக்கெட்களை வேகமாக வீழ்த்த வேண்டும் என்று ஆர்வத்தில் இருந்தார். தென்னாப்பிரிக்க அணியின் துவக்க வீரர் டி காக் ஐந்து ரன்கள் எடுத்த நிலையில் இரண்டாவது ஓவரில் ஆட்டம் இழந்தார்.
அதனால், அடுத்தடுத்து விக்கெட் வீழ்த்த வேண்டும் என ரஷித் கான் வேகத்தை காட்டினார். அப்போது மூன்றாவது ஓவரின் முதல் பந்தை நவீன் உல் ஹக் வீசினார். மற்றொரு துவக்க வீரர் ரீஸா ஹென்ரிக்ஸ் பந்தை தூக்கி அடித்தார். பந்து ஃபீல்டருக்கு முன் விழுந்தது. அந்த ஃபீல்டர் ஓடி வந்து கேட்ச் பிடித்திருக்க வேண்டும் என ரஷித் கான் காட்டமாக நடந்து கொண்டார். ஆனால் ரீப்ளே காட்டப்பட்டபோது அது கடினமான கேட்ச் வாய்ப்பு என்பது தெரியவந்தது. என்னதான் ஃபீல்டர் ஓடி வந்து பாய்ந்து இருந்தாலும் பந்தை அவர் தவற விடவே அதிக வாய்ப்பு இருந்தது.
அதனால் பந்து பவுண்டரிக்கு கூட சென்றிருக்கலாம். ஆனால், சரியாக யோசித்து பந்தை ஒரு பிட்ச் ஆனவுடன் பிடித்து பவுண்டரி செல்வதை தடுத்தார். அதை பாராட்டாமல் ரஷித் கான் அவரை கடிந்து கொண்டதை வர்ணனையாளர்கள் சுட்டிக்காட்டி சிரித்தனர். பின்னர் இந்த போட்டியில் 8.5 ஓவர்களில் தென்னாப்பிரிக்கா அணி வெற்றி இலக்கை எட்டியது. 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது தென்னாப்பிரிக்கா. அதன் மூலம் உலகக்கோப்பை வரலாற்றில் முதன்முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருக்கிறது அந்த அணி.