டார்வின்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வீரர் டிவால்ட் பிரவீஸ் 41 பந்துகளில் சதம் அடித்து அசத்தியுள்ளார். மூன்று டி20 போட்டி மற்றும் மூன்று ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியாவுக்கு தென்னாப்பிரிக்கா அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.
இதில் முதல் டி20 போட்டிகளில் ஆஸ்திரேலியா வெற்றி பெற இரண்டாவது டி20 போட்டி டார்வின் நகரில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.இதனை அடுத்து களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணியில் தொடக்க வீரர் ஏய்டன் மார்க்கரம் 13 பந்துகளில் 18 ரன்கள் எடுத்தார்.

இதில் இரண்டு பவுண்டரி, ஒரு சிக்சர் அடங்கும். இதே போன்று ரியான் ரிக்கல்டன் 10 பந்துகளில் 14 ரன்கள் எடுத்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட லுகான் பிரிட்டோரியஸ் 10 பந்துகளில் வெளியேற தென்னாபிரிக்க அணி 57 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்தது.
இதனை அடுத்து சிஎஸ்கே வீரர் டிவால்ட் பிரவீஸ் களத்திற்கு வந்தார். அவருடன் ஸ்டப்ஸ் ஜோடி சேர்ந்தார். இருவரும் ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சை சுக்கு நூறாக உடைத்தனர். முதலில் பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிரவீஸ், அதன் பிறகு ருத்ரதாண்டவம் ஆடினார். சிக்ஸர், பவுண்டரி என பறக்க விட ஆஸ்திரேலியா வீரர்கள் கதி கலங்கி போனார்கள்.
தம்மை ஏன் ரசிகர்கள் குட்டி டிவில்லியர்ஸ் என்று சொல்கிறார்கள் என்பதை பிரவீஸ் மீண்டும் ஒருமுறை நிரூபித்து இருக்கிறார். தொடர்ந்து அதிரடி காட்டிய அவர் 41 பந்துகளில் சதம் அடித்துள்ளார். இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் சதம் விளாசிய இளம் தென்னாபிரிக்கா வீரர் என்ற பெருமை அவருக்கு கிடைத்தது.
பிரவீஸ் இன் இன்னிங்ஸில் 9 பவுண்டரிகளும் எட்டு இமாலய சிக்சர்களும் அடங்கும். இதனால் தென்னாப்பிரிக்க அணியின் ஸ்கோர் கிடுகிடுவென உயர்ந்தது. பிரவீஸ் சிஎஸ்கே அணியில் தான் தற்போது தொடர்கிறார். இதனால் எங்க ஆள் ஆட்டத்தை பார்த்தீர்களா என்று சிஎஸ்கே ரசிகர்கள் மகிழ்ச்சியில் துள்ளி குதித்து வருகின்றனர். எனினும் இறுதி கட்டத்தில் தென்னாப்பிரிக்கா கொத்தாக விக்கெட்டுகளை இழக்க, பிரவீஸ் மட்டும் தனி ஆளாக போராடி 56 பந்துகளில் 125 ரன்கள் விளாசினார். இதன் மூலம் 20 ஓவர் முடிவில் தென்னாப்பிபிரிக்க அணி 7 விக்கெட் இழப்பிற்கு 218 ரன்கள் குவித்துள்ளது.