லண்டன்: 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி பிரம்மாண்டமான முறையில் நடந்து முடிந்தது. அதில் தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியாவை வீழ்த்தி கோப்பையை வென்றது. இந்தப் போட்டி முடிந்தவுடன் முன்னாள் வீரர்களான கெவின் பீட்டர்சன் மற்றும் மேத்யூ ஹைடன் ஆகியோர் போட்டி குறித்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென கெவின் பீட்டர்சன் இந்தியா - இங்கிலாந்து தொடரை பற்றி பேசத் துவங்கினார்.
இங்கிலாந்து அணியின் அனுபவம் இல்லாத வேகப்பந்து வீச்சாளர்களை இந்திய அணி எளிதாக எதிர்கொள்ளும் என அவர் பேசிக் கொண்டிருந்தபோது, மேத்யூ ஹைடன் திடீரென அந்த இடத்தில் இருந்து விலகிச் சென்றார். அவர் தென்னாப்பிரிக்கா அணியின் வேகப்பந்து வீச்சாளர் காகிசோ ரபாடாவை கேமராவுக்கு முன் அழைத்து வந்தார்.

பின்னர், "நாம் ஏன் இந்தியா - இங்கிலாந்து தொடரைப் பற்றி பேசிக் கொண்டிருக்க வேண்டும்? அதை விடுங்கள்! இப்போது நம்மிடம் ஜாம்பவான் ஆன காகிசோ ரபாடா நம் முன் இருக்கிறார்!" என்று தனது பேச்சை மாற்றினார் கெவின் பீட்டர்சன்.
இதன் மூலம், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியிலும் இந்திய அணி பற்றி பேசுவதற்கு நடந்த முயற்சியை மடைமாற்றிவிட்டார் மேத்யூ ஹைடன். அந்த அளவுக்கு இந்திய அணியின் ஆதிக்கம் வெளிநாட்டு தொலைக்காட்சியிலும் இருக்கிறது.
இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான ஒளிபரப்பு மற்றும் விளம்பர வருவாயை விட, இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரின் ஒரு போட்டி அதிக வருவாயை ஈட்டும் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் காரணமாகவே முன்னாள் வீரர்கள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் கூட இந்தியா - இங்கிலாந்து தொடரைப் பற்றி பேசிக்கொண்டிருந்தனர். எனினும், மேத்யூ ஹைடன் அதை லாவகமாக மாற்றிவிட்டார்.
இந்த இறுதிப் போட்டியில் காகிசோ ரபாடா சிறப்பாக செயல்பட்டு முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். அதன் மூலம் தென்னாப்பிரிக்க அணிக்காக டெஸ்ட் போட்டியில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்களின் பட்டியலில் நான்காவது இடத்திற்கு முன்னேறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.