லண்டன் : 2019 உலகக்கோப்பை தொடரின் ஐந்தாவது லீக் போட்டியில் தென்னாப்பிரிக்கா - வங்கதேசம் மோதின.
இந்தப் போட்டியில் வங்கதேச அணி அதிரடியாக ரன் குவித்து தென்னாப்பிரிக்கா அணியை திணற வைத்தது. வங்கதேச அணி பேட்டிங் செய்து வந்த போது, நான்கு ஓவர்கள் வீசிய நிலையில் லுங்கி நிகிடி போட்டியில் இருந்து வெளியேறினார்,
அவருக்கு என்ன ஆனது என போட்டியில் பரபரப்பு ஏற்பட்டது. தென்னாப்பிரிக்கா அணி பந்து வீசி முடிக்கும் வரை அவர் களத்துக்கு வரவில்லை. என்ன ஆனது லுங்கி நிகிடிக்கு?
இந்தப் போட்டியில், தென்னாப்பிரிக்கா அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. துவக்கத்தில் 4-5 ஓவர்கள் வரை வங்கதேச வீரர்கள் நிதான ஆட்டம் ஆடினர். பின்னர் அதிரடிக்கு மாறினர். துவக்க ஓவர்களில் பந்து வீசி வந்தார் தென்னாப்பிரிக்கா அணியின் லுங்கி நிகிடி.
அவர் சரியாக நான்கு ஓவர்கள் வீசி முடித்த நிலையில் ஆடுகளத்தை விட்டு வெளியேறி, உடை மாற்றும் அறைக்கு சென்றார். அதன் பின் வங்கதேசம் பேட்டிங் ஆடி முடிக்கும் வரை மீண்டும் ஆடுகளத்துக்கு வரவில்லை. அவருக்கு தசைப்பிடிப்பு ஏற்பட்டது என பின்னர் தகவல் கூறப்பட்டது.
இதனால், லுங்கி நிகிடி இந்த போட்டி முழுவதும் பங்கேற்க முடியாது. இது தென்னாப்பிரிக்கா அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. போட்டியின் முதல் ஏழு ஓவர்கள் இருக்கும் போதே, முக்கிய வேகப் பந்துவீச்சாளர் நான்கு ஓவர்கள் மட்டுமே வீசிய நிலையில் வெளியேறியது, அந்த அணியின் பந்துவீச்சை சிக்கலில் ஆழ்த்தியது.
தென்னாப்பிரிக்கா அணி லுங்கி வீச வேண்டிய ஆறு ஓவர்களை பகுதி நேர பந்துவீச்சாளர்களான எய்டன் மார்கிரம், ஜேபி டுமினி ஆகியோர் வீசி சமாளித்தனர். லுங்கி நிகிடி பேட்டிங் செய்யவும் வரமாட்டார் என்பதால், தென்னாப்பிரிக்கா 9 விக்கெட்கள் வரை மட்டுமே பேட்டிங் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டது.
ஏற்கனவே, தென்னாப்பிரிக்கா அணியின் அனுபவ வேகப் பந்துவீச்சாளர் டேல் ஸ்டெய்ன் ஐபிஎல் தொடரில் ஏற்பட்ட காயத்தால், உலகக்கோப்பை தொடரின் முதல் சில போட்டிகளில் ஆட முடியாத நிலையில் இருக்கிறார்.
தற்போது இளம் வீரர் லுங்கி நிகிடியும் காயமடைந்து இருப்பது அந்த அணிக்கு பலத்த அதிர்ச்சியாக அமைந்துள்ளது. தென்னாப்பிரிக்கா அடுத்து இந்திய அணிக்கு எதிராக ஜூன் 5 அன்று விளையாட உள்ளது. அதற்குள் டேல் ஸ்டெய்ன் தயாராகிவிடுவார் என்ற தகவல் மட்டுமே தென்னாப்பிரிக்கா அணிக்கு ஆறுதலான விஷயம்.