மும்பை : கிரிகெட் என்பது சில மீட்டர்கள் சில இஞ்ச்கள் வித்தியாசத்தில் போட்டியின் முடிவுகளை தலைகீழாக மாற்றும் விளையாட்டாகும். பவுலர்கள் யாக்கரை வீசுவதற்கு பதிலாக கொஞ்சம் மாற்றி வீசினாலும் இல்லை பேட்ஸ்மேன் சிக்ஸர் அடிக்க முயற்சி செய்து அதனை ஃபீல்டர் பவுண்டரி லைன் அருகே பிடித்தாலும் அது போட்டியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
இதனால் தான் இந்தியாவில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளில் மைதானத்தின் பவுண்டரி குறைந்த பட்சம் 70 மீட்டருக்கு மேலாவது வையுங்கள் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். ஆனால் இதனை பிசிசிஐ கேட்பது கூட கிடையாது.

ஆஸ்திரேலியா இங்கிலாந்து போன்ற நாடுகளில் பவுண்டரி லைன் 80 மீட்டருக்கும் அதிகமாக இருக்கும். இந்த சூழலில் பேட்ஸ்மேன்கள் அடிக்கும் சிக்ஸர்கள் அனைத்துமே கேட்ச் ஆக மாறிவிடும். இன்னும் சொல்லப்போனால், இந்தியாவில் நாம் பார்க்கும் சிக்ஸர்கள் எல்லாம் வெளிநாட்டு மைதானங்களில் நிச்சயம் ஃபில்டர்களிடம் கேட்ச் ஆகிவிடும்.
எடுத்துக்காட்டாக தற்போது டி20 உலக கோப்பையில் நியூயார்க்கில் நடத்தப்படும் போட்டியில் மைதானத்தின் நேராக பவுண்டரி லைன் 70 மீட்டராக அமைக்கப்பட்டிருக்கிறது. இது நமது இந்திய கிரிக்கெட் மைதானங்களை விட வெறும் ஐந்து அல்லது பத்து மீட்டர் தான் அதிகமாக இருக்கும். ஆனால் இதனை கூட வீரர்களால் கடக்க முடியவில்லை.
இதற்கு பவுண்டரி தூரம் ஒரு காரணமாக இருந்தாலும் ஆடுகளத்தின் தன்மையும் இன்னொரு காரணமாக பார்க்கப்படுகிறது. ஆடுகளம் தோய்வாக இருக்கும் போது பேட்ஸ்மேன் எவ்வளவு பவரை போட்டு அடித்தாலும், பந்து பவுண்டரி லைனை தாண்டாது. இதுதான் தற்போது நடக்கிறது. இதே சூழல் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கடைசி கட்ட ஓவர்களில் நடந்திருப்பதை ரசிகர்கள் பார்த்திருப்பீர்கள்.
ஆனால் அங்கு மைதானத்தின் பவுண்டரி லைன் மிகவும் குறைவாக இருக்கும் என்பதால் சில சமயங்கள் அது சிக்ஸராக மாற வாய்ப்பு இருக்கிறது. இங்கு பௌண்டரி லைன் கொஞ்சம் அதிகம் என்பதால் வீரர்கள் உயிரைக் கொடுத்து அடிக்கும் பந்து கூட பவுண்டரி லைனை தாண்டவில்லை. தென்னாப்பிரிக்கா வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் இரண்டு பந்துக்கு 6 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தபோது, கேசவ் மகாராஜ் வீசிய பந்தை மகமதுல்லா தூக்கி அடித்தார்.
ஆனால் கடைசி கட்டத்தில் மார்க்கரம் அபார கேட்ச் பிடித்தார். இதே பந்து இந்திய மைதானங்களில் அடித்திருந்தால் அது நிச்சயம் சிக்ஸர் ஆகி இருக்கும். இதனால் தான் இந்தியாவில் நடைபெறும் போட்டிகளில் மைதானத்தின் சுற்றளவை அதிகரிக்க வேண்டும் என்று ரசிகர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.