சவுத்தாம்ப்டன்: இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 72 ரன்களில் ஆட்டம் இழந்து 342 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவி இருக்கிறது. மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் தென் ஆப்பிரிக்க அணி இரண்டு போட்டிகளை வென்று தொடரை ஏற்கனவே கைப்பற்றியது.
இந்த நிலையில் மூன்றாவது ஒருநாள் போட்டி சவுத்தாம்ப்டன் நகரில் நடைபெற்றது. ஆறுதல் வெற்றியைப் பெற இங்கிலாந்து அணி இந்தப் போட்டியில் கடுமையாக போராடியது. ஆனால் தொடரை இழந்த சோகத்தில் இருந்த இங்கிலாந்து அணி தென்னாப்பிரிக்காவை எப்படியாவது மண்ணை கவ்வ வைக்க வேண்டும் என்ற உத்வேகத்தில் விளையாடியது.

இங்கிலாந்து அணியில் ஜோ ரூட் 96 பந்துகளில் சதம் அடிக்க, ஜேக்கப் போத்தல் 82 பந்துகளில் 110 ரன்கள் சேர்த்தார். இறுதியில் ஜாஸ் பட்லர் 32 பந்துகளில் 62 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் 50 ஓவர் முடிவில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் இழப்பிற்கு 414 ரன்கள் குவித்தது. இதனை அடுத்து 415 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி மிகவும் மோசமான ஒரு பேட்டிங்கை வெளிப்படுத்தியது.
குறிப்பாக இங்கிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் பவுலிங்கை எதிர்கொள்ள முடியாமல் தென்னாப்பிரிக்க வீரர்கள் தடுமாறினர். தொடக்க வீரர் எய்டன் மார்க்கரம் டக் அவுட்டாகினார். ரியான் ரிக்கல்டன் 1 ரன்னில் ஆட்டம் இழந்தனர். இதனால் 7 ரன்களுக்கு தென்னாபிரிக்க அணி நான்கு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 10 ரன்களிலும், பிரவீஸ் 6 ரன்களிலும் வெளியேற தென்னாப்பிரிக்க அணி 24 ரன்களுக்கு ஆறு விக்கெட்டுகளை இழந்து சோகமான நிலையில் இருந்தது.வரலாற்று தோல்வியை தென்னாப்பிரிக்க அணி தழுவும் பாதையில் சென்றது. இறுதியில் கார்பன் போஸ் 20 ரன்களும், கேசவ் மஹராஜ் 17 ரன்களும் எடுக்க தென்னாப்பிரிக்கா அணி 20 புள்ளி ஐந்து ஓவரில் 72 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இங்கிலாந்து வீரர் ஜோப்ரா ஆர்ச்சர் நான்கு விக்கெட்களும், ஆதில் ரசித் மூன்று விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இதன் மூலம் 342 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் தங்களது மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது. எனினும் தொடரை தென்னாப்பிரிக்க அணி இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் கைப்பற்றியது.