ஆன்டிகுவா : தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் 7 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி தோல்வியை சந்தித்துள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணியை எளிதாக வீழ்த்திய இங்கிலாந்து அணி, தென்னாப்பிரிக்கா அணியை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பை கிட்டத்தட்ட உறுதிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இங்கிலாந்து வீரர்களின் தவறால் ஒட்டுமொத்தமாக ஒரு தோல்வியை பெற்றுள்ளது.
இந்த போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி முதல் பேட்டிங் ஆடிய போது, பவர் பிளேவை நன்றாக பயன்படுத்தி கொண்டது. இங்கிலாந்து பவுலர்கள் யார் வீசினாலுன் வெளுத்து கட்டும் மனநிலையுடன் டி காக் இருந்தார். இதனால் தென்னாப்பிரிக்கா அணி பவர் பிளே ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 69 ரன்களை குவித்தது.

ஆனால் மறுபுறம் இங்கிலாந்து அணி பவர் பிளேவில் 41 ரன்களை மட்டுமே சேர்த்தது. ஏற்கனவே பிட்ச் ஸ்லோவாக இருப்பதை அறிந்து இங்கிலாந்து பவுலர்கள் கட்டர்ஸ் பந்துகளை வீசி ரன் குவிப்பை கட்டுப்படுத்தினர். இதனால் 160 முதல் 170 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டால், கடைசி வரை இங்கிலாந்து அணி பேட்ஸ்மேன்கள் களத்தில் நின்று விளையாட வேண்டிய நிலை வரும் என்று கணிக்கப்பட்டிருந்தது.
இந்த சூழலில் பில் சால்ட் அதிரடியாக விளையாட முயன்று 11 ரன்களில் வெளியேறியதும், பேர்ஸ்டோவ் - பட்லர் இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த தொடங்கினர். இதனையறிந்து ஸ்பின்னர்களை கொண்டு வந்து தென்னாப்பிரிக்கா அணி அட்டாக் செய்ய தொடங்கியது. இருந்தாலும் ஆட்டத்தின் போக்கை அறிந்து சில பவுண்டரிகளை விளாசி இருந்தாலே, இங்கிலாந்து அணி மீதான அழுத்தம் குறைந்திருக்கும்.
ஆனால் சிக்ஸ் அடிக்க முயன்று பட்லர், மொயின் அலி உள்ளிட்ட அனுபவ பேட்ஸ்மேன்களும் விக்கெட்டை பறிகொடுத்தனர். அதேபோல் தென்னாப்பிரிக்கா அணியின் ஃபீல்டிங் அந்த அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. ஏனென்றால் டி காக் கொடுத்த கேட்ச் இங்கிலாந்து வீரர் பிடித்த போது, நாட் அவுட் என்று தீர்ப்பளிக்கப்பட்டது.
இந்த தோல்வியின் காரணமாக இங்கிலாந்து அணியின் அரையிறுதி வாய்ப்பு பின்னடைவை சந்தித்துள்ளது. ஏனென்றால் தென்னாப்பிரிக்கா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா அணி வென்றால் மட்டுமே இங்கிலாந்து அணியால் அரையிறுதி வாய்ப்பு பற்றி சிந்திக்க முடியும். அதேபோல் அமெரிக்காவுக்கு எதிரான போட்டியில் மிகப்பெரிய ரன் வித்தியாசத்தில் வெற்றிபெற வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டுள்ளது.