கேபெர்ஹா: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் அரை சதம் அடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் துவக்க வீரர் அபிஷேக் சர்மா. அவர் 2024 ஐபிஎல் தொடரில் அதிரடியாக ஆடி ரன் குவித்ததன் காரணமாக இந்திய அணியில் இடம் பெற்று இருந்தார். ஆனால், இதுவரை இந்திய அணிக்காக ஆடிய 9 போட்டிகளில் 166 ரன்கள் மட்டுமே எடுத்து இருக்கிறார்.
அதில் அவர் ஒரு போட்டியில் சதம் அடித்து இருந்தார். அதை நீக்கிவிட்டு பார்த்தால் எட்டு போட்டிகளில் 66 ரன்கள் மட்டுமே எடுத்து இருக்கிறார். அவர் மோசமான ஃபார்மில் இருப்பது போன்ற தோற்றம் ஏற்பட்டு இருக்கிறது. தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் போட்டியிலும் அவர் 7 ரன்களில் ஆட்டம் இழந்தார்.

இந்த நிலையில், தென்னாப்பிரிக்க டி20 தொடரில் மீதம் உள்ள மூன்று போட்டிகளில் அவர் ரன் குவிக்கவில்லை என்றால் இந்திய அணியில் இருந்து நீக்கப்படுவார் என இந்திய அணி வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது. அடுத்த மூன்று போட்டிகளிலும் அவர் தொடர்ந்து ரன் குவிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.
ஒரு போட்டியில் மட்டும் அரை சதம் அல்லது சதம் அடித்து விட்டு, அடுத்த இரண்டு போட்டிகளில் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தாலும் அவரது இடத்துக்கு வேறு ஒருவர் வர வாய்ப்பு உள்ளது. ஏனெனில், அவர் ஏற்கனவே ஒரு சதம் அடித்து இருக்கிறார். ஆனால், அதன் பின் ஆடிய எந்த போட்டியிலும் 20 ரன்களை கூட தாண்டவில்லை. மேலும், இரண்டு முறை டக் அவுட் ஆகி இருக்கிறார்.
தென்னாப்பிரிக்க டி20 தொடரில் மீதமுள்ள மூன்று போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டும் ரன் குவித்து விட்டு, மற்ற இரண்டு போட்டிகளில் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தாலும், அவர் தொடர்ந்து ரன் குவிப்பதில்லை என்ற காரணத்தை முன்வைத்து இந்திய டி20 அணியில் இருந்து நீக்கப்படுவார்.
தற்போது சுபம்ன் கில் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் இந்திய டி20 அணியில் துவக்க வீரர் இடத்துக்கு போட்டி போட்டு வருகின்றனர். சஞ்சு சாம்சன் அடுத்தடுத்த இரண்டு போட்டிகளில் சதம் அடித்து துவக்க வீரராக தனது இடத்தை நிலை நிறுத்தி இருக்கிறார். இவர்களை தவிர்த்து ஜெய்ஸ்வாலும் இந்த போட்டியில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே, தற்போது ஐந்து வீரார்கள் இரண்டு துவக்க வீரர்கள் இடத்துக்கு போட்டி போட்டு வருகின்றனர். அபிஷேக் சர்மா தனது இடத்தை நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றால் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான அடுத்த மூன்று போட்டிகளிலும் தொடர்ந்து ரன் குவிக்க வேண்டும். இரண்டு அரை சதமாவது அடிக்க வேண்டும்.