செஞ்சுரியன்: இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோத உள்ள மூன்றாவது டி20 போட்டி செஞ்சுரியன் நகரில் உள்ள சூப்பர் ஸ்போர்ட் பார்க் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியின் போது மழை பெய்ய வாய்ப்பு உள்ளதா? இந்த போட்டிக்கான பிட்ச் எப்படி இருக்கும்? அது இந்திய அணிக்கு சாதகமாக இருக்குமா? டாஸ் வெல்லும் அணி என்ன முடிவு எடுக்க வேண்டும்? என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.
இந்தியா - தென்னாப்பிரிக்கா 3வது டி20 போட்டி நடைபெற உள்ள சூப்பர் ஸ்போர்ட் பார்க் மைதானத்தில் போட்டி நாளான புதன்கிழமை அன்று மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. ஆனால், பகல் நேரத்தில் 25 சதவீதமும், மாலை நேரத்தில் 7 சதவீதமும் மட்டுமே மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இது போன்ற சூழ்நிலைகளில் மழை பெய்யாமல் போகவும் வாய்ப்பு உள்ளது. எனவே, இந்தப் போட்டி முழுமையாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதே சமயம் போட்டியின் போது அதிக காற்று இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. மேலும், வானம் மேகமூட்டமாக இருக்கும். இதை வைத்து பார்க்கும் போது போட்டி சூழ்நிலை வேகப் பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். செஞ்சுரியன் மைதானத்தின் பிட்ச் எப்படி இருக்கும் என்பதை பற்றி இப்போது பார்க்கலாம்.
இங்கு பொதுவாகவே வேகப் பந்துவீச்சுக்கு சாதகமான பிட்ச் இருக்கும். வேகப் பந்துவீச்சாளர்கள் வீசும் பந்துகள் எளிதாக மேலே எழும்பும் என்பதோடு, விரைவாகவே பேட்டுக்கு வரும். அதை சரியாக கனித்து ஆட வேண்டும். இந்த பிட்ச்சில் பவுன்ஸ் மற்றும் வேகம் அதிகமாக இருக்கும். எனவே, டாஸ் வெல்லும் அணி முதலில் பந்து வீசவே முயற்சிக்க வேண்டும்.
இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் டாஸ் வென்றால் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்ய வேண்டும். தென்னாப்பிரிக்காவை முதலில் பேட்டிங் ஆட வைத்து, மிக குறைந்த ஸ்கோருக்குள் வீழ்த்த வேண்டும். அதன் பின் சேஸிங் செய்யும் முயற்சிக்க வேண்டும். இதுவே இந்திய அணிக்கு சரியான திட்டமாக இருக்கும்.
இந்த தொடரின் முதல் போட்டியில் 61 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, இரண்டாவது போட்டியில் மூன்று விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்து இருக்கிறது. எனவே, மூன்றாவது போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது இந்திய அணி.