ஜோகன்னஸ்பெர்க்: தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் சஞ்சு சாம்சன் அடித்த சிக்ஸ் ஒன்று இந்திய ரசிகை ஒருவரின் முகத்தை பதம் பார்த்தது. அவர் கன்னத்தில் பந்து அடித்ததால் வலியில் துடித்தார். அந்த காட்சிகள் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வேகமாக பரவி வருகிறது. சிலர் சஞ்சு சங்சன் அந்த ரசிகையிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறி வருகின்றனர்.
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் நான்கு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வந்தன. இந்த தொடரின் நான்காவது போட்டி ஜோஹன்னஸ்பெர்க் நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் வென்றால் இந்தியா இந்த தொடரை கைப்பற்றும் என்ற நிலை இருந்தது. துவக்க வீரர சஞ்சு சாம்சன் அதிரடியாக ஆடினார்.

அவர் தொடர்ந்து சிக்ஸர்கள் அடித்து வந்தார். பத்தாவது ஓவரின் இரண்டாவது பந்தில் அவர் சிக்ஸ் அடித்தார். அதற்கு முந்தைய பந்திலும் அவர் சிக்ஸ் அடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அந்த ஓவரில் இரண்டாவதாக அவர் அடித்த சிக்ஸ் கூட்டத்தில் இருந்த இந்திய ரசிகை ஒருவரின் முகத்தை பதம் பார்த்தது. அவருக்கு பலத்த காயம் எதுவும் ஏற்படவில்லை.
எனினும், கன்னத்தில் வீக்கம் இருந்ததால் ஐஸ் பேக் வைக்கப்பட்டது. அந்த ரசிகை வலியில் கண்ணீர் விட்டபடி இருந்தார். அந்த காட்சிகள் நேரலையில் ஒளிபரப்பானது. அந்த வீடியோ காட்சி பின்னர் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மத்தியில் பரவியது. சிலர் சஞ்சு சாம்சன் போட்டிக்கு பின் அந்த ரசிகையை நேரில் பார்த்து ஆறுதல் கூற வேண்டும், மன்னிப்பு கேட்க வேண்டும் என்றெல்லாம் கூறி வருகின்றனர்.
வேறு சிலரோ சஞ்சு சாம்சன் ஆடும்போது மைதானத்தில் இருக்கும் பார்வையாளர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அவர் அதிக சிக்ஸர்கள் அடிப்பதை சுட்டிக் காட்டி உள்ளனர். சர்வதேச டி20 போட்டிகளில் ஒரே இன்னிங்ஸில் அதிக சிக்ஸ் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையை சஞ்சு சாம்சன் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த போட்டியில் அபாரமாக ஆடிய சஞ்சு சாம்சன் 51 பந்துகளில் சதம் அடித்தார். இது சர்வதேச டி20 போட்டிகளில் அவரது மூன்றாவது சதமாகும். மேலும், ஒரே ஆண்டில் மூன்று சதங்களை அடித்து சாதனை படைத்து இருக்கிறார். இந்தப் போட்டியில் திலக் வர்மாவும் சதம் அடித்தார். இந்திய அணி 20 ஓவர்களில் 283 ரன்கள் குவித்தது.