டர்பன்: இந்திய டி20 அணியில் இடம் பெற்று இருக்கும் அதிரடி துவக்க வீரர் அபிஷேக் சர்மா தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் மிக மோசமான முறையில் ஆட்டம் இழந்தார். அவர் இதுவரை ஆடிய 9 போட்டிகளில் எட்டு முறை ரன் குவிக்காமல் ஏமாற்றம் அளித்து இருக்கிறார்.
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதிய முதல் டி20 போட்டி டர்பன் நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. அபிஷேக் சர்மா மற்றும் சஞ்சு சாம்சன் துவக்கம் அளித்து ஆடினர்.

சஞ்சு சாம்சன் ஒருபுறம் அதிரடி ஆட்டத்தை ஆடிக்கொண்டிருந்த நிலையில் அபிஷேக் சர்மா நான்காவது ஓவரின் முதல் பந்தியிலேயே எளிதான கேட்ச் ஒன்றை கொடுத்து ஆட்டம் இழந்தார். ஜெரால்டு கோட்ஸி வீசிய பந்தில் அவர் மிட் ஆஃப் திசையில் பந்தை தூக்கி அடித்தார்.
அதை தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் ஐடன் மார்கிரம் ஓடிச் சென்று கேட்ச் பிடித்தார். இதை அடுத்து அபிஷேக் சர்மா 8 பந்துகளில் 8 ரன்கள் மட்டும் எடுத்து ஆட்டம் இழந்து வெளியேறினார். ஒரே ஒரு பவுண்டரி மட்டுமே அடித்திருந்தார். 2024 ஐபிஎல் தொடரில் அதிக ரன் குவித்தன் காரணமாகவே அபிஷேக் சர்மா இந்திய அணியில் இடம் பிடித்து இருந்தார்.
சுப்மன் கில்லின் நெருங்கிய நண்பர் என்பதால் எதிர்காலத்தில் சுப்மன் கில் மற்றும் அபிஷேக் சர்மா இணைந்து துவக்கம் அளிப்பார்களா? என்ற எதிர்பார்ப்பும் இருந்தது. ஆனால், அபிஷேக் சர்மாவின் பேட்டிங் ஏமாற்றமாகவே உள்ளது.
இதுவரை ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில் சதம் அடித்தது மட்டுமே இந்தியாவுக்காக அபிஷேக் சர்மா ஆடிய சிறப்பான ஆட்டமாகும். மற்ற ஏழு இன்னிங்ஸ்களில் அவர் ஒரு முறை கூட 20 ரன்களை தாண்டவில்லை. சொற்ப ரன்களுக்கு ஆட்டம் இழந்து வந்தார். மொத்தம் ஒன்பது போட்டிகளில் விளையாடி 166 ரன்கள் மட்டுமே எடுத்து இருக்கிறார் அபிஷேக் சர்மா.
அதில் அவர் அடித்த ஒரு சதத்தை ஒதுக்கி விட்டு பார்த்தால் எட்டு போட்டிகளில் 66 ரன்கள் மட்டுமே எடுத்து இருக்கிறார். எனவே, அவருக்கு இனியும் இந்திய அணியில் இடம் கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.