பரபரப்பு
இந்த போட்டிக்கு முன்பாக, இரு அணிகளைச் சேர்ந்த முக்கிய வீரர்கள் ஒருவரைப் பற்றி ஒருவர் பேட்டி அளித்தது போட்டிக்கு முன்பாக பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதன் பின்னணியில் வேறு ஏதேனும் திட்டம் இருக்குமோ? என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
விமர்சனம்
இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளின் வீரர்கள் இடையே பெரிய சண்டைகள் ஏதும் இதுவரை இருந்ததில்லை. அதிகபட்சம் ஆடுகளத்தில் சில முறைப்பு, உரசல் என்பதோடு அது நின்று விடும். ஆனால், தற்போது தென்னாப்பிரிக்க வீரர் ரபாடா, இந்திய அணி கேப்டன் கோலி குறித்து பேட்டியில் விமர்சனம் செய்து களத்துக்கு வெளியே பஞ்சாயத்தை கூட்டியுள்ளார்.
ஐபிஎல் சம்பவம்
2019 ஐபிஎல் தொடரின் போது டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக ஆடினார் ரபாடா. அப்போது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில், விராட் கோலிக்கு அவர் பந்து வீசும் போது இருவரும் காரசாரமாக பேசிக் கொண்டனர்.
கோபம் வந்தது
அந்த சம்பவத்தை, உலகக்கோப்பை தொடரில் நினைவுகூர்ந்த ரபாடா, "அப்போது நான் விராட் கோலியை வீழ்த்த திட்டமிட்டுக் கொண்டு இருந்தேன். ஆனால், கோலி பவுண்டரி அடித்து விட்டு என்னுடன் சில வார்த்தைகள் பேசினார். நான் திருப்பி பேசிய போது, அவருக்கு கோபம் வந்து விட்டது. ஆனால், நான் கோபப்படவில்லை."
முதிர்ச்சி இல்லாதவர்
"ஒருவேளை அவர் அப்படி செய்வது தான் அவர் நன்றாக ஆட உதவலாம். ஆனால், எனக்கு அது முதிர்ச்சி இல்லாதது போலத் தான் இருக்கிறது. அவர் மிகச் சிறந்த வீரர். ஆனால், அவரைப் பற்றி தவறாக பேசினால் அவரால் அவற்றை எடுத்துக் கொள்ள முடியவில்லை. ஆனால், அது போன்ற விஷயங்கள், உங்களை திசை திருப்பக் கூடாது" என்றார் ரபாடா.
பதிலடி
ரபாடாவின் இந்த விமர்சனத்துக்கு விராட் கோலி அருமையான பதிலடி கொடுத்துள்ளார். கோலி கூறுகையில், "நான் ரபாடாவுக்கு எதிராக பல முறை விளையாடி இருக்கிறேன். நாங்கள் எதை விவாதிக்க வேண்டும் என்றாலும், நேருக்கு நேர் பேசிக் கொள்ளலாம். அவர் கூறிய எதற்கும் பதில் சொல்ல எனக்கு பத்திரிக்கையாளர் சந்திப்பு தேவையில்லை" என்றார்.
திசை திருப்பும் முயற்சி
ரபாடா தேவையே இல்லாமல் விராட் கோலியை சீண்டியுள்ளார். ஐபிஎல் தொடர் பற்றி ரபாடா இப்போது பேச வேண்டிய அவசியமே இல்லை. ஆனால், அவர் கோலியை ஏன் சீண்டினார்? இந்தியா - தென்னாப்பிரிக்கா போட்டியின் போது அவரை இதை வைத்து திசை திருப்பவும் வாய்ப்புள்ளது.