கேபெர்ஹா: தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் ஹர்திக் பாண்டியா பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் செய்த தவறுகள் இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தன. இந்தப் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது அப்போது விரைவாக விக்கெட்களை இழந்து இருந்தது.
ஒரு கட்டத்தில் இந்திய அணி 87 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்து தவித்தது. அப்போது ஹர்திக் பாண்டியா மட்டுமே அதிரடி பேட்ஸ்மேனாக களத்தில் இருந்தார். மறுபுறம் அர்ஷ்தீப் சிங் நின்றார். அதன் பின்பு இருந்த மூன்று பேட்ஸ்மேன்களும் அதிக ரன் குவிக்கும் வாய்ப்பு இல்லை என்பதால் விக்கெட் இழக்காமல் ரன் குவிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தார் பாண்டியா.

கடைசி மூன்று ஓவர்களில் ஹர்திக் பாண்டியா, அர்ஷ்தீப் சிங்குக்கு ஸ்ட்ரைக் கொடுக்க மறுத்தார். அர்ஷ்தீப் சிங்கால் பவுண்டரி அடிக்க முடியாது என நினைத்து அவ்வாறு செய்தார் பாண்டியா. அதே சமயம் ஹர்திக் பாண்டியாவாலும் ரன் குவிக்க முடியவில்லை.
18வது ஓவரில் இரண்டு ஃபோர் மற்றும் ஒரு சிக்ஸ் அடித்த ஹர்திக் பாண்டியா, அதற்கு அடுத்த இரண்டு ஓவர்களில் மொத்தம் எட்டு டாட் பால்களை ஆடினார். அந்த 8 டாட் பால்களில் சில சிங்கிள்களை ஹர்திக் எடுத்து இருக்கலாம். அதன்பின் அர்ஷ்தீப் ஒரு சிக்ஸ் அடித்து இருக்கலாம். அது இந்திய அணியின் ஸ்கோரை உயர்த்தியும் இருக்கும்.
ஆனால், பிடிவாதமாக இருந்த ஹர்திக் பாண்டியா கடைசி இரண்டு ஓவர்களில் எட்டு டாட் பால்களை ஆடி இருந்தார். இதில் வேடிக்கை என்னவென்றால் ஹர்திக் பாண்டியாவும் ஒரு சிக்ஸ் மட்டுமே அடித்து இருந்தார். அர்ஷ்தீப் சிங்கும் ஒரு சிக்ஸ் மட்டுமே அடித்து இருந்தார். ஹர்திக் பாண்டியா 45 பந்துகளில் 39 ரன்களும், அர்ஷ்தீப் 6 பந்துகளில் 7 ரன்களும் எடுத்து இருந்தனர்.
இந்த சூழ்நிலையில் இருவரும் மாற்றி, மாற்றி ஸ்ட்ரைக்கை வைத்து பேட்டிங் ஆடி இருந்தாலும் பெரிய மாற்றம் எதுவும் நடந்திருக்காது. ஒருவேளை அர்ஷ்தீப் சிங் ஆட்டம் இழந்தாலும், அடுத்து 3 பேட்ஸ்மேன்கள் இருந்தனர். மூன்று விக்கெட்கள் கையில் இருக்கும் நிலையிலும் ஹர்திக் பாண்டியா தானே ஸ்ட்ரைக்கை வைத்துக் கொண்டு ஆட வேண்டும் என நினைத்தது இந்திய அணிக்கு பாதகமாக அமைந்தது.
இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 124 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில், அடுத்து தென்னாப்பிரிக்க அணி 19 ஓவர்களில் 126 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. பந்துவீச்சில் ஹர்திக் பாண்டியா சொதப்பினார். 3 ஓவர்களில் 22 ரன்கள் விட்டுக் கொடுத்த அவர், தான் வீசிய 15 வது ஓவரில் ஒரு பவுண்டரி கூட கொடுக்க கூடாது என நினைத்தார்.
அதனால் பந்தை கிரீசை விட்டு அகலமாக செல்லுமாறு வீசினார். அதனால் அந்த ஓவரில் 3 வைடு பந்துகள் சென்றன. அந்த ஓவரில் மட்டும் அவர் 9 ரன்களை விட்டுக் கொடுத்து இருந்தார். இப்படி ஹர்திக் பாண்டியா மூத்த வீரராக இருந்தும் பேட்டிங்கிலும், பந்துவீச்சிலும் எடுத்த முடிவுகள் இந்திய அணியில் தோல்விக்கு ஒரு காரணமாக அமைந்தது.