ஜோஹன்னஸ்பெர்க்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் இந்திய அணி பல்வேறு சாதனைகளை உடைத்து எறிந்தது. இந்த போட்டியில் சதம் அடித்த சஞ்சு சாம்சன் மற்றும் திலக் வர்மா இதற்கு முன் எந்த அணியாலும் செய்ய முடியாத சாதனையை இந்திய அணி செய்ய முக்கிய காரணமாக அமைந்தனர்.
இதற்கு முன் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் முழு நேர உறுப்பினராக இருக்கும் எந்த ஒரு அணியும் ஒரே டி20 இன்னிங்ஸில் இரண்டு சதங்களை அடித்ததில்லை. முதன் முறையாக இந்திய அணி அந்த சாதனையை செய்துள்ளது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் ஒரே இன்னிங்ஸில் இந்திய அணியின் சஞ்சு சாம்சன் மற்றும் திலக் வர்மா சதம் அடித்து அந்த சாதனையை நிகழ்த்தினர்.

அவர்கள் இருவரும் இரண்டாவது விக்கெட்டுக்கு 210 ரன்கள் சேர்த்தனர். அதுவே சர்வதேச டி20 போட்டிகளில் இந்திய அணியின் மிகப்பெரிய கூட்டணி ஆகும். இந்த போட்டியில் இந்திய அணி சர்வதேச டி20 போட்டிகளில் அதிக சிக்ஸ் அடித்த சாதனையை செய்தது. இந்த ஒரே போட்டியில் இந்திய அணி 23 சிக்ஸர்களை அடித்து இருந்தது. சஞ்சு சாம்சன் 9 சிக்ஸ், அபிஷேக் சர்மா 4 சிக்ஸ், திலக் வர்மா 10 சிக்ஸ் அடித்து இருந்தனர்.
இந்த தொடரில் சஞ்சு சாம்சன் இரண்டு முறையும், திலக் வர்மா இரண்டு முறையும் சதம் அடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் இந்திய அணி ஒரே ஆண்டில் ஏழு சதங்கள் அடித்த அணி என்ற சாதனையை செய்துள்ளது. இந்த ஆண்டின் துவக்கத்தில் ரோஹித் சர்மா ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராகவும், அபிஷேக் சர்மா ஜிம்பாப்வே அணிக்கு எதிராகவும் சதம் அடித்து இருந்தனர்.
கடந்த மாதம் சஞ்சு சாம்சன் வங்கதேச அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் தனது முதல் சர்வதேச டி20 சதம் அடித்து இருந்தார். அதன் பின் தென்னாப்பிரிக்க டி20 தொடரில் சஞ்சு சாம்சன் இரண்டு முறையும், திலக் வர்மா இரண்டு முறையும் சதம் அடித்து உள்ளனர். சஞ்சு சாம்சன் ஒரே ஆண்டில் சர்வதேச டி20 போட்டிகளில் மூன்று சதம் அடித்த முதல் கிரிக்கெட் வீரர் என்ற சாதனையையும் சேர்த்து செய்திருக்கிறார்.
இந்த போட்டியில் இந்திய அணி 20 ஓவர்களில் 283 ரன்கள் எடுத்தது. இதுவே இந்திய அணியின் இரண்டாவது மிகப்பெரிய டி20 ஸ்கோர் ஆகும். இதற்கு முன் வங்கதேச அணிக்கு எதிராக 297 ரன்கள் எடுத்திருந்ததே இந்தியாவின் அதிகபட்ச ஸ்கோர் ஆகும். மேலும், இதுவே தென்னாப்பிரிக்க மண்ணில் இந்திய அணியின் மிகப்பெரிய ஸ்கோர் ஆகும். வெளிநாட்டில் இந்திய அணியின் மிகப் பெரிய ஸ்கோர் ஆகவும் இது அமைந்தது.
இந்தப் போட்டியில் 284 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய தென்னாப்பிரிக்க அணி 148 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணி 135 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. ரன்கள் வித்தியாசத்தில் இது இந்திய அணியின் மூன்றாவது மிகப் பெரிய வெற்றி ஆகவும், தென்னாப்பிரிக்க அணியின் மிகப் பெரிய தோல்வி ஆகவும் அமைந்தது.