டர்பன்: இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதிய முதல் டி20 போட்டியில் தென்னாப்பிரிக்க பந்துவீச்சாளர் பேட்ரிக் க்ரூகர் ஒரு ஓவருக்கு 11 பந்துகள் வீசினார். அந்த ஓவரின் கடைசி பந்தில் சூர்யகுமார் யாதவ் விக்கெட்டையும் வீழ்த்தினார்.
இந்தப் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. துவக்க வீரர் அபிஷேக் சர்மா 7 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அடுத்து சஞ்சு சாம்சன் மற்றும் சூர்யகுமார் யாதவ் இணைந்து அதிரடியாக ஆடி வந்தனர்.

இருவரும் ஒரு ஓவருக்கு 10 ரன்கள் என்ற கணக்கில் விரைவாக ரன் சேர்த்து வந்தனர். சஞ்சு சாம்சன் 27 பந்துகளில் அரை சதம் கடந்தார். மறுபுறம் சூர்யகுமார் யாதவும் அதிரடியாக ஆடினார். அவர்கள் விக்கெட்டை வீழ்த்துவதற்காக மூன்றாவது வேகப் பந்துவீச்சாளராக பேட்ரிக் க்ரூகர் 9 ஆம் ஓவரை வீசினார்.
அந்த ஓவரில் இரண்டாவது பந்தில் சஞ்சு சாம்சன் ஃபோர் அடித்தார். அடுத்து பாட்ரிக் ஒரு நோ பால் வீசினார். அதன் பின் சூர்யகுமார் யாதவ் ஸ்ட்ரைக்குக்கு வந்தார். அப்போது வரிசையாக ஒரு நோ பால் மற்றும் 3 வைடுகளை வீசினார் பாட்ரிக். இதை அடுத்து அவருக்கு அழுத்தம் அதிகரித்தது. எனினும், நான்காவது பந்து மற்றும் ஐந்தாவது பந்தில் அவர் தலா ஒரு ரன் மட்டும் விட்டுக் கொடுத்தார்.
கடைசி பந்தை சூர்யகுமார் யாதவ் சந்தித்தார். அப்போது பேட்ரிக் வீசிய நக்கிள் பந்தை சூர்யகுமார் யாதவ் சிக்ஸராக மாற்ற நினைத்தார். ஆனால், அது பவுண்டரி எல்லை அருகே நின்ற ஃபீல்டரால் கேட்ச் பிடிக்கப்பட்டது. இதை அடுத்து சூர்யகுமார் யாதவ் 17 பந்துகளில் 21 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார்.
ஒரு ஓவருக்கு இரண்டு நோ பால், மூன்று வைடு உட்பட மொத்தம் 11 பந்துகளை வீசியிருந்தாலும் அந்த ஓவரின் முடிவில் முக்கிய விக்கெட்டான சூர்யகுமாரின் விக்கெட்டை வீழ்த்தி ஆறுதல் அடைந்தார். இந்திய அணி 9 ஓவர்கள் முடிவில் 90 ரன்கள் எடுத்து 2 விக்கெட் இழந்து இருந்தது. அதன் பின் சஞ்சு சாம்சன் அதிரடி ஆட்டத்தை தொடர்ந்து தனது இரண்டாவது டி20 சதத்தை அடித்தார்.