டர்பன்: இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதிய போட்டியில் சஞ்சு சாம்சன் எந்த இந்திய விக்கெட் கீப்பரும் செய்யாத பிரம்மாண்ட சாதனையை செய்தார். தோனி, ரிஷப் பண்ட் போன்ற இந்திய அணியின் அதிரடி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்கள் கூட செய்யாத சாதனையை சஞ்சு சாம்சன் செய்தார்.
அவர் இந்த போட்டியில் 47 பந்துகளில் சதம் அடித்து இருந்தார். இது சஞ்சு சாம்சன் சர்வதேச டி20 போட்டிகளில் அடிக்கும் இரண்டாவது சதம் ஆகும். இதன் மூலம் அடுத்தடுத்த சர்வதேச டி20 போட்டிகளில் சதம் அடித்து சாதனை படைத்து இருந்தார்.

முன்னதாக வங்கதேச அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் 111 ரன்கள் எடுத்து இருந்தார். அதற்கு அடுத்து ஆடிய தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் சஞ்சு சாம்சன் 50 பந்துகளில் 107 ரன்கள் எடுத்து இருந்தார். இதன் மூலம், இந்திய அணிக்காக வெளிநாட்டில் சதம் அடித்த ஒரே இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையை அவர் செய்து இருக்கிறார்.
மேலும், வெளிநாட்டு சர்வதேச டி20 போட்டிகளில் அதிக ரன் குவித்த இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையையும் செய்து இருக்கிறார். முன்னதாக அவர் வங்கதேச அணிக்கு எதிராக 111 ரன்கள் எடுத்ததே இந்திய விக்கெட் கீப்பர் ஒருவர் சர்வதேச டி20 போட்டிகளில் அடித்த அதிகபட்ச ஸ்கோர் ஆகும். இந்திய டி20 அணியின் வெற்றிகரமான விக்கெட் கீப்பர்களான தோனி மற்றும் ரிஷப் பண்ட் இதுவரை சர்வதேச டி20 போட்டிகளில் சதம் அடித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சஞ்சு சாம்சன் அடுத்தடுத்த போட்டிகளில் சதம் அடித்ததன் மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் அடுத்தடுத்து சதம் அடித்த ஒரே இந்திய வீரர் என்ற சாதனையையும் செய்து இருக்கிறார். இந்த போட்டியில் சஞ்சு சாம்சன் 10 சிக்ஸ் அடித்து இருந்தார்.
அதன் மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக ஒரே போட்டியில் அதிக சிக்ஸ் அடித்த வீரர்கள் பட்டியலில் ரோஹித் சர்மாவுடன் முதல் இடத்தை பகிர்ந்து கொண்டார். 2017 ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிராக ரோஹித் சர்மா 10 சிக்ஸ் அடித்து இருந்தார். அந்த சாதனையை சஞ்சு சாம்சன் சமன் செய்தார்.