IND vs SA: சூர்யகுமார் யாதவ் செய்த மெகா சொதப்பல்.. இந்திய அணியின் தோல்விக்கு காரணமே இதுதான்!
கேபெர்ஹா: தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்து இருக்கிறது. இந்தத் தோல்விக்கு கேப்டன் சூர்யகுமார் யாதவ் எடுத்த ஒரு தவறான முடிவு தான் காரணம். அவர் அக்சர் பட்டேலுக்கு ஓவர் கொடுக்காதது பெரிய தவறாக அமைந்தது.
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 124 ரன்கள் மட்டுமே எடுத்தது. திலக் வர்மா 20 ரன்கள், அக்சர் பட்டேல் 27 ரன்கள், ஹர்திக் பாண்டியா 39 ரன்கள் எடுத்து இருந்தனர். அடுத்து 125 ரன்கள் என்ற சிறிய இலக்கை நோக்கி ஆடியது தென்னாப்பிரிக்க அணி.

இந்திய சுழற் பந்துவீச்சாளர்களின் பந்து வீச்சில் தென்னாப்பிரிக்க வீரர்கள் ரன் குவிக்க தினறியதோடு விக்கெட்களையும் பறிகொடுத்து வந்தனர். ஒரு கட்டத்தில் 66 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்து இருந்தது தென்னாப்பிரிக்க அணி. அப்போது வருண் சக்கரவர்த்தி மற்றும் ரவி பிஷ்னோய் என தென்னாப்பிரிக்க அணியை அச்சுறுத்தி வந்த இரண்டு ஸ்பின்னர்களுக்கு ஓவர்கள் முடிந்திருந்தன.
மூன்றாவது சுழற் பந்துவீச்சாளரான அக்சர் பட்டேல் அப்போது ஒரு ஓவர் மட்டுமே வீசி 2 ரன்கள் கொடுத்து இருந்தார். அவருக்கு மூன்று ஓவர்கள் மீதம் இருந்தன. அவருக்கு கடைசி மூன்று அல்லது நான்கு ஓவர்களின் போது ஒரு ஓவராவது பந்து வீச வாய்ப்பு அளித்திருக்க வேண்டும். ஏனெனில், தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன்கள் இந்திய சுழற் பந்துவீச்சாளர்களை சந்திக்க திணறியது கடந்த போட்டியிலும் தெரிந்தது.
அப்படி இருக்கும்போது அக்சர் பட்டேலை மூன்றாவது சுழற் பந்துவீச்சாளராக அணியில் தேர்வு செய்து விட்டு, அவருக்கு அவசியமான நேரத்தில் ஓவர் அளிக்காதது மிகப்பெரிய தவறாக மாறியது. தென்னாபிரிக்க அணி கடைசி மூன்று ஓவர்களில் 25 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில் இருந்தது.
அப்போது அர்ஷ்தீப் சிங் மற்றும் அவேஷ் கான் பந்து வீசினர். அவர்களின் ஓவர்களில் தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன்கள் எளிதாக ரன் குவித்தனர். அதனால் தென்னாப்பிரிக்க அணி 19வது ஓவரின் முடிவிலேயே வெற்றி இலக்கை எட்டியது. மாறாக 17, 18 அல்லது 19 ஆவது ஓவரில் அக்சர் பட்டேலை பந்து வீச வைத்து இருந்தால் தென்னாப்பிரிக்க அணி அந்த ஓவரை கவனமாக ஆடி இருக்கும்.
அதனால், போட்டி கடைசி ஓவர் வரை சென்று இருக்கும் வாய்ப்பும் கிடைத்திருக்கும். அந்த வகையில் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பவுலிங் ,மாற்றத்தில் தவறு செய்து இருக்கிறார். இதுவே இந்த போட்டியில் இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைய முக்கிய காரணமாகவும் அமைந்தது.


Click it and Unblock the Notifications