செஞ்சூரியன் : தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய வீரர் திலக் வர்மா 51 பந்துகளில் சதம் விளாசி வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார். இந்த நிலையில் திலக் வர்மாவுக்கு ஆட்டநாயகன் விருது கிடைத்தது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர் இந்திய அணிக்காக சதம் அடிக்க வேண்டும் என்பது என்னுடைய கனவு.
நான் சரியான நேரத்தில் என்னுடைய அணிக்காக அதை இன்று செய்திருப்பது மிக்க மகிழ்ச்சி. தொடரை தீர்மானிக்கக்கூடிய போட்டியாக இதை நாங்கள் கருதினோம். கடும் நெருக்கடி இந்த போட்டிக்கு முன்பு எங்களுக்கு இருந்தது.

இந்த சூழலில் நன்றாக விளையாடியது மகிழ்ச்சி அளிக்கிறது. நான் சதம் அடித்ததற்கு முக்கிய காரணம், பாராட்டுகள் அனைத்தும் என்னுடைய கேப்டன் சூரிய குமாருக்கு தான் சேரும். ஏனென்றால் அவர்தான் இன்று பேட்டிங்கில் மூன்றாவது வீரராக என்னை களம் இறக்கி வாய்ப்பு கொடுத்தார்.
இந்த போட்டிக்கு முன்பு என்னிடம் வந்து இன்று நீ மூன்றாவதாக பேட்டிங் செய்யப் போகிறார் என்று கூறினார். அந்த வாய்ப்பு கிடைத்ததற்கு நான் மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன். இன்று களத்திற்கு சென்று முழு சுதந்திரத்துடன் விளையாடினேன். என்னுடைய அடிப்படையை நான் என்றும் தவறியதில்லை.
எவ்வளவு நெருக்கடியாக இருந்தாலும் அடிப்படையான சில விஷயங்களை நான் பின்தொடர்ந்து செய்து வருகின்றேன். ஆடுகளம் பவுன்ஸ் கணிக்க முடியாதபடி இருந்தது. இதனால் அபிஷேக் ஷர்மா ஆட்டமிழந்த உடன் புதிய வீரர்கள் வந்து பேட்டிங் செய்ய கடினமாக இருந்தது. இதனால் நான் கடைசி வரை நின்று விளையாட வேண்டிய நிலை ஏற்பட்டது.
நான் மேலும் ஒரு புதிய பார்ட்னர்ஷிப் அமைப்பதற்காக காத்துக் கொண்டிருந்தேன். என்னுடைய வெற்றிக்கு அடிப்படையை நம்பி, அடிப்படையான விஷயங்களை பின் தொடர்வது தான். என்னை போன்ற வீரருக்கு அணி நிர்வாகம் நல்ல உறுதுணையாக இருந்தது மகிழ்ச்சி அளிக்கிறது என்று திலக் வர்மா கூறியுள்ளார்.