ஜோஹன்னஸ்பெர்க்: தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரில் இரண்டு சதங்களை அடித்த திலக் வர்மா, விராட் கோலியின் சாதனையை முறியடித்து இருப்பதோடு, இந்திய டி20 அணியில் அவரது இடத்தையும் நிரப்பி இருக்கிறார். சர்வதேச டி20 போட்டிகளில் நீண்ட காலமாக நம்பர் ஒன் வீரராக வலம் வந்தார் விராட் கோலி.
அவர் இந்திய டி20 அணியில் மூன்றாம் வரிசையில் பேட்டிங் செய்து வந்தார். 2024 டி20 உலகக் கோப்பை தொடருடன் அவர் ஓய்வு பெற்றதை அடுத்து அவரது இடத்தில் வெவ்வேறு பேட்ஸ்மேன்கள் ஆடி வந்தனர். இந்த நிலையில், தென்னாப்பிரிக்க டி20 தொடரின் கடைசி இரண்டு போட்டிகளில் திலக் வர்மா மூன்றாம் வரிசையில் களம் இறங்கினார்.

அதற்கு முந்தைய இரண்டு போட்டிகளில் பெரிய அளவில் ரன் குவிக்காத அவர், மூன்றாம் வரிசையில் தான் ஆடிய இரண்டு போட்டிகளிலும் இரண்டு சதங்களை அடித்து பல்வேறு சாதனைகளை முறியடித்தார். இந்த தொடரின் மூன்றாவது போட்டியில் அவர் 107 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
அடுத்து நான்காவது போட்டியில் சஞ்சு சாம்சன் உடன் இணைந்து 210 ரன்களுக்கு கூட்டணி அமைத்த அவர், 120 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அதன் மூலம், இந்த தொடரில் நான்கு போட்டிகளில் 280 ரன்களை குவித்து இருக்கிறார் திலக் வர்மா. ஒரே இரு தரப்பு டி20 தொடரில் இந்திய கிரிக்கெட் வீரர் எடுத்த அதிகபட்ச ரன்கள் இதுவே ஆகும்.
இதற்கு முன் விராட் கோலி இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட இரு தரப்பு டி20 தொடரில் 231 ரன்கள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது. அதை திலக் வர்மா முறியடித்து இருக்கிறார். இதன் மூலம் விராட் கோலியின் இடத்தை நிரப்ப சரியான வீரர் என்பதையும் நிரூபித்து இருக்கிறார்.
டி20 அணியில் சிறப்பாக ஆடி இருக்கும் திலக் வர்மா, அடுத்து இந்திய ஒரு நாள் அணியிலும் தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்பு உள்ளது. தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான நான்கு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 3 - 1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. தொடர் நாயகன் விருதையும் திலக் வர்மா வென்றார்.