கொல்கத்தா: 2026 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர் ஃபின் ஆலன் அதிவேக சதம் விளாசி பல்வேறு புதிய உலக சாதனைகளை படைத்துள்ளார். குறிப்பாக, உலகிலேயே எந்த வீரரும் செய்யாத உலகக்கோப்பை சிக்ஸர் சாதனை ஒன்றையும் எட்டி இருக்கிறார்.
இந்த அரையிறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 170 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி நியூசிலாந்து அணி களமிறங்கியது. தொடக்க வீரராக களமிறங்கிய ஃபின் ஆலன், தென்னாப்பிரிக்க பந்துவீச்சாளர்களின் பந்துகளை நாலாபுறமும் சிதறடித்தார். ஆட்டத்தின் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய அவர், வெறும் 33 பந்துகளில் தனது சதத்தை பூர்த்தி செய்து புதிய வரலாறு படைத்தார்.

இதன் மூலம் டி20 உலகக் கோப்பை வரலாற்றில் அதிவேக சதம் அடித்த வீரர் என்ற மாபெரும் சாதனையை ஃபின் ஆலன் தனது வசமாக்கியுள்ளார். இதற்கு முன்பாக வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிரிஸ் கெய்ல் 47 பந்துகளில் சதம் அடித்ததே சாதனையாக இருந்தது. மேலும், டி20 உலகக் கோப்பை நாக் அவுட் போட்டிகளில் சதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார். தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் மார்கோ ஜான்சன் வீசிய பந்துகளில் தொடர்ந்து பவுண்டரிகளை விளாசி அவர் தனது சதத்தை எட்டினார்.
இந்த அரையிறுதிப் போட்டியில் ஃபின் ஆலன் 10 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்களை பறக்கவிட்டார். இந்த 8 சிக்ஸர்களின் மூலம் நடப்பு 2026 டி20 உலகக் கோப்பை தொடரில் அவர் அடித்த மொத்த சிக்ஸர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 8 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் இந்த மைல்கல்லை எட்டியுள்ளார்.
இதன் மூலம் டி20 உலகக் கோப்பை வரலாற்றில், ஒரே தொடரில் 20 சிக்ஸர்களை விளாசிய முதல் வீரர் என்ற புதிய உலக சாதனையையும் ஃபின் ஆலன் படைத்துள்ளார். பவர்பிளே ஓவர்களிலேயே எதிரணியின் பந்துவீச்சை துவம்சம் செய்யும் அவரது இந்த ஆட்ட முறை நியூசிலாந்து அணிக்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது.

ஃபின் ஆலன் தற்கால கிரிக்கெட்டின் மிகச் சிறந்த அதிரடி தொடக்க வீரர்களில் ஒருவராக அறியப்படுகிறார். வலதுகை பேட்ஸ்மேனான இவர் விக்கெட் கீப்பராகவும் செயல்படக்கூடியவர். சர்வதேச டி20 போட்டிகளில் நியூசிலாந்து அணிக்காக அதிகபட்ச தனிநபர் ஸ்கோரை பதிவு செய்தவரும் இவரே ஆவார். கடந்த 2024 ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கு எதிராக அவர் 137 ரன்கள் குவித்திருந்தார்.
இவரது இந்த அதிரடி ஆட்டத்தின் காரணமாக, 2026 ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இவரை 2 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது. உள்ளூர் போட்டிகளில் ஆக்லாந்து அணிக்காகவும், உலகெங்கிலும் நடைபெறும் பல்வேறு டி20 தொடர்களிலும் அவர் விளையாடி வருகிறார்.
இந்த அரையிறுதிப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் மார்கோ ஜான்சன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 54 ரன்கள் சேர்த்தார். நியூசிலாந்து பந்துவீச்சில் கோல் மெக்கன்சி மற்றும் ரச்சின் ரவீந்திரா ஆகியோர் சிறப்பாக செயல்பட்டனர்.

பின்னர் களமிறங்கிய நியூசிலாந்து அணியில் ஃபின் ஆலன் மற்றும் டிம் செய்ஃபெர்ட் ஜோடி சிறப்பான தொடக்கத்தை அமைத்தது. டிம் செய்ஃபெர்ட் 58 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். ஃபின் ஆலனின் வரலாற்று சிறப்புமிக்க சதத்தால் நியூசிலாந்து அணி 12.5 ஓவர்களிலேயே 1 விக்கெட்டை மட்டும் இழந்து 173 ரன்கள் எடுத்து வெற்றியை பதிவு செய்தது. இன்னும் 7.1 ஓவர்கள் மீதமிருந்த நிலையில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று, டி20 உலகக் கோப்பை வரலாற்றில் இரண்டாவது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.