லாகூர்: தென்னாப்பிரிக்க அணிக்கு சர்வதேச கிரிக்கெட் தொடர்களான சாம்பியன்ஸ் டிராபி மற்றும் உலகக் கோப்பைகளில் துரதிர்ஷ்டம் தொடர்ந்து வருகிறது. உலகின் சிறந்த கிரிக்கெட் அணிகளில் ஒன்றாக இருக்கும் தென்னாப்பிரிக்கா 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியிடம் தோல்வி அடைந்தது.
கடந்த 11 ஆண்டுகளில் மட்டும் இது ஐந்தாவது ஐசிசி நாக் - அவுட் போட்டி தோல்வி ஆகும். ஒருமுறை கூட கோப்பை வெல்லாத தென்னாப்பிரிக்கா அணி நாக் அவுட்-போட்டிகளில் நாக் அவுட் ஆகும் அணியாக மட்டுமே இருந்து வருகிறது. நேற்று நியூசிலாந்து அணிக்கு எதிராக தோல்வி அடைந்த பின் தென்னாப்பிரிக்க வீரர்கள் சோகத்துடன் வெளியேறி இருந்தனர்.

உலகில் சிறந்த ஆல்ரவுண்டரான ஜாக் காலிஸ், மிஸ்டர் 360 என அழைக்கப்படும் அதிரடி பேட்ஸ்மேன் ஏ.பி. டி வில்லியர்ஸ், தலைசிறந்த பேட்ஸ்மேன்கள் பட்டியலில் இடம் பெற்று இருக்கும் ஹாஷிம் ஆம்லா, க்ரீம் ஸ்மித், ஹெர்ஷல் கிப்ஸ் என தென்னாப்பிரிக்க அணியில் எப்போதும் சிறந்த வீரர்கள் ஆடியுள்ளனர். அப்படி இருந்தும் அந்த அணி இதுவரை ஐசிசி நடத்தும் சர்வதேச கிரிக்கெட் தொடர்களில் ஒரு முறை கூட கோப்பை வென்றதில்லை.
இதற்கு முந்தைய காலத்தை விட்டுவிட்டு கடைசி 11 ஆண்டுகள் மட்டும் எடுத்துக் கொண்டாலும், அதில் ஐந்து முறை அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் வரை முன்னேறி தோல்வி அடைந்து இருக்கிறது தென்னாப்பிரிக்கா அணி. 2014 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறியது. அப்போது இந்திய அணியிடம் ஆறு விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
அடுத்து 2015 ஒருநாள் போட்டி உலகக்கோப்பை அரை இறுதி போட்டியில் முன்னேறிய தென்னாப்பிரிக்க அணி நியூசிலாந்து அணியிடம் 4 விக்கெட் வித்தியாசத்தில் டக்வொர்த் லூயிஸ் முறைப்படி தோல்வி அடைந்தது. அந்தப் போட்டியில் மழை பெய்ததால் தென்னாப்பிரிக்காவுக்கு இந்த நிலை ஏற்பட்டது.
2023 ஒரு நாள் போட்டி உலகக் கோப்பை அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை சந்தித்தது தென்னாப்பிரிக்கா. அந்தப் போட்டியில் மூன்று விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. அடுத்து 2024 டி20 உலக கோப்பை இறுதிப்போட்டி வரை முன்னேறியது தென்னாப்பிரிக்கா. முதன்முறையாக இறுதிப்போட்டிக்கு அந்த அணி முன்னேறியது. அத்துடன் உலக கோப்பையையும் வெல்லும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது.
இதைத் தொடர்ந்து தற்போது 2025 சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதிக்கு முன்னேறிய தென் ஆப்பிரிக்கா அணி, குரூப் சுற்றில் தான் ஆடிய அனைத்து போட்டிகளிலும் ஆதிக்கம் செலுத்தி வெற்றி பெற்றது. அதனால் இந்த அணியை அரையிறுதியில் வீழ்த்த முடியாது என்றே பலரும் எதிர்பார்த்தனர். ஆனால், நியூசிலாந்து அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது.
இதை எடுத்து தென்னாப்பிரிக்கா சோகத்துடன் தொடரிலிருந்து வெளியேறி உள்ளது. உலகக்கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி ஆகியவற்றை வெல்வதற்கான அனைத்து தகுதியும் திறமையும் இருந்தும் தென்னாப்பிரிக்கா அணி அதை வெல்லாமல் இருப்பது கிரிக்கெட் ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. தென்னாப்பிரிக்கா அடுத்து ஆஸ்திரேலியாவில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் சந்திக்க உள்ளது. அதில் சாம்பியன் பட்டம் வென்றால் இந்த சோகத்துக்கு முடிவு கட்ட முடியும்.