கொல்கத்தா: 2026 ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில் பலம் வாய்ந்த தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடைபெறும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் மிட்செல் சாண்ட்னர் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து தென்னாப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்யவுள்ளது.
டாஸ் வென்ற பிறகு பேசிய நியூசிலாந்து கேப்டன் மிட்செல் சாண்ட்னர், ஆடுகளம் பேட்டிங்கிற்கு மிகவும் சாதகமாக இருக்கும் என எதிர்பார்ப்பதாகக் கூறினார். தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை வீழ்த்தி தென்னாப்பிரிக்க அணியைக் குறைந்த ரன்களில் சுருட்டத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். கொழும்பில் நடைபெற்ற கடந்த போட்டியில் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான சூழல் இருந்தது. ஆனால் கொல்கத்தாவில் சுழற்பந்து வீச்சு எடுபடாது என்பதால் இஷ் சோதிக்கு பதிலாக ஜேம்ஸ் நீஷம் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும், மேட் ஹென்றி அணிக்குத் திரும்பியுள்ளார்.

தென்னாப்பிரிக்க கேப்டன் எய்டன் மார்க்ரம் பேசுகையில், முதலில் பேட்டிங் செய்து பெரிய ஸ்கோரை நிர்ணயிக்க உள்ளதாகத் தெரிவித்தார். நாக் அவுட் போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்வது எப்போதுமே அணிக்குச் சாதகமான ஒரு விஷயம் என்றும் அவர் குறிப்பிட்டார். அந்த அணியில் ககிசோ ரபாடா, மார்கோ ஜான்சன் மற்றும் கேசவ் மகராஜ் ஆகியோர் மீண்டும் விளையாடும் அணியில் இணைந்துள்ளனர். ஆடுகளத்தைப் பொறுத்தவரை புதிய பந்தில் சற்று சீரற்ற பவுன்ஸ் இருக்கும் என்றும், பனியின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால் பேட்டிங் செய்ய எளிதாக இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
டி20 உலகக் கோப்பை வரலாற்றில் இதுவரை தென்னாப்பிரிக்க அணியை நியூசிலாந்து வீழ்த்தியதே இல்லை. இந்தத் தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முனைப்பில் நியூசிலாந்து களமிறங்குகிறது. அந்த அணியின் தொடக்க வீரர்களான டிம் செய்ஃபெர்ட் மற்றும் ஃபின் ஆலன் ஆகியோர் பேட்டிங்கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். பந்துவீச்சில் மிட்செல் சாண்ட்னர் ரன்களைக் கட்டுப்படுத்தினாலும், விக்கெட்டுகளை வீழ்த்த மேட் ஹென்றியை அந்த அணி பெரிதும் நம்பியுள்ளது.

மறுபுறம், நடப்புத் தொடரில் தென்னாப்பிரிக்க அணி எந்தவொரு குறையும் இல்லாமல் அனைத்துத் துறைகளிலும் அசுர பலத்துடன் காணப்படுகிறது. கேப்டன் மார்க்ரம் பேட்டிங்கில் தொடர்ந்து ரன்களைக் குவித்து வருகிறார். பந்துவீச்சில் லுங்கி இங்கிடி, மார்கோ ஜான்சன் மற்றும் கார்பின் போஷ் ஆகியோர் எதிரணிக்கு சிம்ம சொப்பனமாக விளங்குகின்றனர். இதுவரை விளையாடிய அனைத்துப் போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ள தென்னாப்பிரிக்கா, அதே உத்வேகத்துடன் இறுதிப்போட்டிக்கு முன்னேறத் தீவிரமாக உள்ளது.

நியூசிலாந்து அணி: டிம் செய்ஃபெர்ட், ஃபின் ஆலன், ரச்சின் ரவீந்திரா, க்ளென் பிலிப்ஸ், மார்க் சாப்மேன், டேரில் மிட்செல், ஜேம்ஸ் நீஷம், மிட்செல் சாண்ட்னர் (கேப்டன்), கோல் மெக்கன்சி, மேட் ஹென்றி, லாக்கி ஃபெர்குசன்.
தென்னாப்பிரிக்க அணி: எய்டன் மார்க்ரம் (கேப்டன்), குயின்டன் டி காக், ரியான் ரிக்கல்டன், டெவால்ட் பிரெவிஸ், டேவிட் மில்லர், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், மார்கோ ஜான்சன், கார்பின் போஷ், ககிசோ ரபாடா, கேசவ் மகராஜ், லுங்கி இங்கிடி.