செஞ்சுரியன்: தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்ஸில் பாபர் அசாம் அரைசதம் அடித்து ஃபார்முக்கு திரும்பியுள்ளார். இதன் மூலமாக சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் பாபர் அசாம் 19 இன்னிங்ஸிற்கு பின் அரைசதம் அடித்து கம்பேக் கொடுத்திருப்பதாக அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
தென்னாப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி செஞ்சுரியன் மைதானத்தி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதல் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணி 211 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டான நிலையில், பின்னர் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி கார்பின் பாஸ்சின் அபார ஆட்டத்தால் 301 ரன்களை குவித்தது.

இதனால் பாகிஸ்தான் அணி 2வது இன்னிங்ஸை 90 ரன்கள் பின் தங்கிய நிலையில் தொடங்கியது. தொடர்ந்து 2வது நாள் முடிவில் பாகிஸ்தான் அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 88 ரன்கள் சேர்த்திருந்தனர். இந்த நிலையில் நட்சத்திர வீரர் பாபர் அசாம் 16 ரன்களிலும், சாவூத் சக்கீல் 8 ரன்களிலும் 3வது நாள் ஆட்டத்தை தொடங்கினர். இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி பாகிஸ்தான் அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
சிறப்பாக ஆடிய பாபர் அசாம் 80 பந்துகளில் அரைசதத்தை எட்டி அசத்தினார். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக 19 இன்னிங்ஸில் அரைசதம் அடிக்க முடியாமல் பாபர் அசாம் திணறி வந்தார். 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கு பின், தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் அரைசதம் அடித்து அசத்தினார். ஆனால் அடுத்த சில பந்துகளிலேயே ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர்.
பின்னர் வந்த வீரர்களில் சாவூத் சக்கீலுக்கு போதுமான உதவி கிடைக்காததால், தனியாளாக போராடி பாகிஸ்தான் அணியின் ஸ்கோரை 200 ரன்களுக்கு மேல் கொண்டு சென்றார். சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட போது மார்கோ யான்சன் வீசிய ஃபுல் டாஸ் பந்தில் 84 ரன்கள் எடுத்து எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். இறுதியாக பாகிஸ்தான் அணி 237 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது.
தென்னாப்பிரிக்கா அணி தரப்பில் மார்கோ யான்சன் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதனால் தென்னாப்பிரிக்கா அணியின் வெற்றிக்கு 148 ரன்கள் மட்டுமே தேவையாக இருந்தது. பின்னர் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணிக்கு சோர்சி - மார்க்ரம் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. இதில் சோர்சி 2 ரன்னிலும், அடுத்து வந்த ரிக்கல்டன் டக் அவுட்டாகியும், ஸ்டப்ஸ் 1 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
இதனால் 3வது நாள் ஆட்டம் முடிவில் தென்னாப்பிரிக்கா அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 27 ரன்கள் சேர்த்திருக்கிரது. மார்க்ரம் 22 ரன்களும், பவுமா ரன் ஏதும் எடுக்காமலும் களத்தில் உள்ளனர். தென்னாப்பிரிக்கா அணியின் வெற்றிக்கு இன்னும் 121 ரன்கள் தேவையாக உள்ளது. இந்தப் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி வெற்றி பெற்றால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு அந்த அணி தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.