சென்சுரியன்: தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரரான பாபர் அசாம் வெறும் 4 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறி இருக்கிறார். இதன் மூலமாக தொடர்ச்சியாக 19 இன்னிங்ஸ்களாக ஒரு அரைசதம் கூட அடிக்க முடியாமல் பாபர் அசாம் திணறி வருவது ரசிகர்களின் விமர்சனத்தை பெற்று வருகிறது.
தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பாகிஸ்தான் அணி டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. ஏற்கனவே டி20 தொடரை தென்னாப்பிரிக்கா அணியும், ஒருநாள் தொடரை பாகிஸ்தான் அணியும் கைப்பற்றின. இந்த நிலையில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணியின் கேப்டன் பவுமா பவுலிங்கை தேர்வு செய்தார். இதன்பின் பாகிஸ்தான் அணி தரப்பில் ஷான் மசூத் - சயீம் அயூப் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. முதல் விக்கெட்டுக்கு 36 ரன்கள் சேர்த்திருந்த நிலையில், கேப்டன் ஷான் மசூத் 17 ரன்களில் ஆட்டமிழக்க, சயீம் அயூப் 14 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன்பின் பாபர் அசாம் - கம்ரான் குலாம் கூட்டணி இணைந்தது.
ஏற்கனவே இங்கிலாந்து அணிக்கு எதிரான சொந்த மண்ணில் நடந்த டெஸ்ட் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால், டெஸ்ட் அணியில் இருந்து பாபர் அசாம் நீக்கப்பட்டிருந்தார். தொடர்ச்சியாக 18 இன்னிங்ஸ்களில் பாபர் அசாம் ஒரு அரைசதம் கூட அடிக்க முடியாமல் திணறினார். இதனால் பாபர் அசாமிற்கு ஃபார்முக்கு வரும் வகையில், ஒரு பிரேக் கொடுக்கப்பட்டது.
இதன்பின் அவர் ஆடிய ஒருநாள் போட்டியில் நன்றாக பேட்டிங் ஆடி ஃபார்முக்கு வந்திருந்தார். இதனால் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் அசத்துவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். இந்த நிலையில் சிறிய இடைவெளிக்கு பின் பாபர் அசாம் வெள்ளை ஜெர்சியில் களமிறங்கினார். தொடர்ந்து அவர் வெறும் 4 ரன்களில் பேட்டர்சன் பந்தில் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார்.
இதனால் பாகிஸ்தான் அணி 41 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தவித்தது. இந்த ஆட்டத்தில் நம்பர் 4க்கு பதிலாக நம்பர் 3ல் பாபர் அசாம் களமிறங்கி இருந்தார். இந்த ஆட்டத்திலும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால், தொடர்ச்சியாக டெஸ்ட் கிரிக்கெட்டில் 19 இன்னிங்ஸ்களில் ஒரு அரைசதம் கூட அடிக்காமல் இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இதனால் பாபர் அசாம் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்று பாகிஸ்தான் ரசிகர்களே கடுமையாக விமர்சித்து வருகின்றனர். டெஸ்ட் கிரிக்கெட்டில் பாபர் அசாமிற்கு வாய்ப்புகள் வழங்கப்படுவதை பாகிஸ்தான் அணி நிர்வாகம் நிறுத்த வேண்டும் என்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.