செஞ்சுரியன்: பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்கா அணியின் ஆல்ரவுண்டர் கார்பின் பாஸ்ச் தனியாளாக போராடி 81 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தது அந்த அணிக்கு திருப்புமுனையாக அமைந்துள்ளது.
தென்னாப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி செஞ்சுரியன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி 211 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது. தென்னாப்பிரிக்கா அணியின் டேன் பேட்டர்சன் 5 விக்கெட்டுகளையும், கார்பின் பாஸ்ச் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினர்.

இதன்பின் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி முதல் நாள் ஆட்ட நேரம் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 82 ரன்கள் சேர்த்திருந்தது. இதன்பின் நட்சத்திர வீரர் மார்க்ரம் 47 ரன்களுடனும், கேப்டன் பவுமா 4 ரன்களுடனும் 2வது நாள் ஆட்டத்தை தொடர்ந்தனர். சிறப்பாக ஆடிய மார்க்ரம் 72 பந்துகளில் அரைசதம் கடக்க, இன்னொரு பக்கம் பவுமா நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார்.
4வது விக்கெட்டுக்கு இவர்களின் பார்ட்னர்ஷிப் 70 ரன்களை எட்டிய போது, பவுமா 31 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். தொடர்ந்து வந்த பெடிங்கம் 30 ரன்களிலும், வெரைன் 2 ரன்களிலும், மார்கோ யான்சன் 2 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். இதனால் தென்னாப்பிரிக்கா அணி 191 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
அப்போது கார்பின் பாஸ்ச் ஒரு பக்கம் நிதானமாக ஆட, மறுமுனையில் மார்க்ரம் அதிரடியாக ரன்களை குவித்தார். சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட போது 144 பந்துகளில் 89 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனால் தென்னாப்பிரிக்கா சோலி முடிந்தது என்று பார்க்கப்பட்ட போது, "இருங்க பாய்" என்று சொல்லும் விதமாக கார்பின் பாஸ்ட் அதிரடியில் பொளந்து கட்டினார்.
ரபாடாவை ஒரு முனையில் வைத்து வெளுத்து கட்டிய கார்பின், ஸ்கோரை 250 ரன்களுக்கு மேல் கொண்டு சென்றார். அதுமட்டுமல்லாமல் 46 பந்துகளில் 10 பவுண்டரிகள் உட்பட அரைசதம் அடித்து மிரள வைத்தார். பின்னர் ரபாடா 12 ரன்களில் வெளியேறிய போது, பேட்டர்சன் உள்ளே வந்தார். அதேபோல் மீண்டும் அதிரடியை தொடர்ந்த கார்பின், ஸ்கோரை 301 ரன்களாக உயர்த்தினார். இறுதியாக பேட்டர்சன் 12 ரன்களில் ஆட்டமிழந்த போது தான் காபின் பாஸ்ச்-ன் அதிரடி முடிவுக்கு வந்தது.
கடைசி வரை களத்தில் இருந்த கார்பின் 93 பந்துகளில் 15 பவுண்டரிகள் உட்பட 81 ரன்கள் சேர்த்தார். இதனால் தென்னாப்பிரிக்கா அணி 90 ரன்கள் முன்னிலை பெற்றது. இதன்பின் பாகிஸ்தான் அணி 2வது இன்னிங்ஸை தொடங்கியது. சயீம் அயூப் - ஷான் மசூத் கூட்டணி இணைந்து சிறந்த தொடக்கத்தை கொடுத்தது. முதல் விக்கெட்டுக்கு 49 ரன்கள் சேர்த்த போது அயூப் 27 ரன்களில் ஆட்டமிழக்க, சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த கேப்டன் ஷான் மசூத் 28 ரன்களிலும், தொடர்ந்து வந்த இளம் வீரர் கம்ரான் குலாம் 4 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
இறுதியாக 2வது நாள் ஆட்டம் முடிவில் பாகிஸ்தான் அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 88 ரன்களை சேர்த்துள்ளது. பாபர் அசாம் 16 ரன்களுடனும், சவூத் சக்கீல் 8 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்தப் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி வெல்ல வாய்ப்புகள் உருவாகியுள்ளதால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஒரு காலினை அந்த அணி வைத்துவிட்டதாக அந்த அணி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.