டர்பன்: பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் விளையாடிய தென்னாப்பிரிக்கா வீரர் லிண்டே, போலீஸ் உதவியால் மைதானம் வந்தது தெரிய வந்துள்ளது. 15 நிமிடங்கள் தாமதமானதால் ஹோட்டலிலேயே தென்னாப்பிரிக்கா அணி லிண்டேவை விட்டுச் சென்ற சம்பவம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா 11 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை பெற்றது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய தென்னாப்பிரிக்கா அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 183 ரன்கள் குவித்தது. இதன்பின் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 172 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது.

இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடிய ஜார்ஜ் லிண்டே பேட்டிங் 24 பந்துகளை எதிர்கொண்டு 4 சிக்ஸ், 3 பவுண்டரி உட்பட 48 ரன்களையும், பவுலிங்கில் 4 ஓவர்களில் 21 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். இதனால் ஆட்டநாயகன் விருது லிண்டேவுக்கு அளிக்கப்பட்டது. தென்னாப்பிரிக்கா அணிக்கு 3 ஆண்டுகளுக்கு பின் கம்பேக் கொடுத்துள்ள லிண்டே மாஸ் சம்பவம் செய்து கவனத்தை ஈர்த்துள்ளார்.
ஆனாலும் ஆட்டநாயகன் விருதை பெற்ற பின் லிண்டே தனது சோகத்தை வெளிப்படுத்தியது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் டர்பன் மைதானத்திற்கு வருவதற்காக தென்னாப்பிரிக்கா வீரர்கள் அனைவரும் ஹோட்டலில் இருந்து பிரத்யேக பேருந்து மூலம் புறப்பட்டுள்ளனர். ஆனால் ஜார்ஜ் லிண்டே வருவதற்கு தாமதம் ஏற்பட்ட போது, அவர் இல்லாமலேயே பேருந்து புறப்பட்டு சென்றுள்ளது.
இதன் பின் அங்கிருந்த போலீசார் உதவியுடன் ஜார்ஜ் லிண்டே மைதானத்திற்கு வந்துள்ளார். இதுகுறித்து லிண்டே பேசுகையில், எனது செல்ஃபோன் 15 நிமிடங்கள் தாமதமாக நேரத்தை காட்டியது. அதற்கு முன்பாக 4 மணிக்கு ஹோட்டலில் இருந்து பேருந்துக்கு செல்ல வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால் நான் கீழே வந்த போது, என்னை விட்டு பேருந்து மற்ற வீரர்களுடன் புறப்பட்டு சென்றதை பார்த்தேன்.
அந்த தருணம் மிகவும் மோசமான ஒன்று. நல்ல வேளையாக, அங்கு போலீசார் இருந்தனர். அவர்களின் உதவியால் என்னால் பேருந்துக்கு வர முடிந்தது. அதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், சக வீரர்கள் யாருமே நான் பேருந்தில் இல்லாததை கவனிக்கவில்லை. அதனை நினைக்கும் போது தான் சங்கடமாக உள்ளது. ஆனால் அடுத்தப் போட்டியில் தாமதமாக வரலாம் என்று நினைப்பதாக தெரிவித்துள்ளார்.
கேப்டன், துணைக் கேப்டன், சக வீரர்கள், பயிற்சியாளர்கள் குழு, அனாலிஸ்ட், பிசியோதெரபிஸ்ட், மேனேஜர், த்ரோ டவுன் ஸ்பெஷலிஸ்ட் என்று ஏராளமானோர் ஒரு அணிக்குள் இருந்தும், தங்களின் வீரர் ஒருவரை ஹோட்டலிலேயே மறந்துவிட்டு புறப்பட்டிருப்பது தென்னாப்பிரிக்கா அணி ரசிகர்களிடையே கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது.