கேப் டவுன்: தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் பாபர் அசாம் 21 இன்னிங்ஸ்களுக்கு பின் முதல் அரைசதத்தை விளாசி இருக்கிறார். இதனால் நடப்பாண்டு ஐசிசி ஒருநாள் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் பாபர் அசாம் நம்பர் 1 இடத்தில் முடிக்கும் வாய்ப்பு அமைந்துள்ளது.
தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் தென்னாப்பிரிக்கா அணி கைப்பற்றிய நிலையில், ஒருநாள் தொடரை பாகிஸ்தான் அணி வெற்றியுடன் தொடங்கியது. இந்த நிலையில் கேப் டவுன் மைதானத்தில் இன்று 2வது ஒருநாள் போட்டி நடைபெற்று வருகிறது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணியின் கேப்டன் டெம்பா பவுமா பவுலிங்கை தேர்வு செய்தார். இதன்பின் அப்துல்லா ஷஃபிக் - சயீம் அயூப் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. இதில் அப்துல்லா ஷஃபிக் டக் அவுட்டாகி வெளியேறிய நிலையில், நட்சத்திர வீரர் பாபர் அசாம் களமிறங்கினார். இதன்பின் பாபர் அசாம் நிதானமாக விளையாடி ரன்களை சேர்க்க, சிறப்பாக ஆடிய சயீம் அயூப் 25 ரன்களில் வெளியேறினார்.
தொடர்ந்து பாபர் அசாம் மற்றும் கேப்டன் முகமது ரிஸ்வான் கூட்டணி இணைந்தது. இருவருமே எந்த அவசரமும் காட்டாமல் நிதானமாக ரன்களை சேர்க்க, தென்னாப்பிரிக்கா பவுலர்கள் இவர்களை பிரிக்க முடியாமல் திண்டாடினர். தொடர்ந்து 73 பந்துகளில் அரைசதம் கடந்த பாபர் அசாம் அசத்தினார். 21 இன்னிங்ஸ்களில் பாபர் அசாம் அடிக்கும் முதல் அரைசதம் இதுவாகும்.
இதனால் பாகிஸ்தான் அணி வீரர்கள் உற்சாகமடைந்தனர். இதனை சதமாக மாற்றுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட போது 95 பந்துகளில் 7 பவுண்டரிகள் உட்பட 73 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார். இதன்பின் அதிரடியாக ஆடிய ரிஸ்வான் 82 பந்துகளில் 3 சிக்ஸ், 7 பவுண்டரி உட்பட 80 ரன்களில் ஆட்டமிழக்க, தொடர்ந்து வந்த சல்மான் ஆகா 30 பந்துகளில் 33 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார்.
இதன்பின் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான கம்ரான் குலாம் 25 பந்துகளில் 5 சிக்ஸ், 3 பவுண்டரி உட்பட அரைசதம் விளாசி ஆச்சரியம் கொடுத்தார். பின்ன அவரும் 63 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, இறுதியாக பாகிஸ்தான் அணி 49.5 ஓவர்களில் 329 ரன்கள் குவித்து ஆல் அவுட்டாகியது. தென்னாப்பிரிக்கா அணி தரப்பில் மபாகா 4 விக்கெட்டுகளையும், யான்சன் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.