கேப்டவுன்: பாகிஸ்தான் அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி 615 ரன்களை குவித்துள்ளது. தென்னாப்பிரிக்கா அணியின் தொடக்க வீரர் ரிக்கல்டன் முச்சதம் விளாசுவர் என்று எதிர்பார்க்கப்பட்ட போது, 259 ரன்களில் ஆட்டமிழந்து சோகமாக வெளியேறினார்.
தென்னாப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி கேப்டவுன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய தென்னாப்பிரிக்கா அணி முதல் நாள் ஆட்டம் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 316 ரன்களை குவித்திருந்தது. தொடக்க வீரர் ரிக்கல்டன் 176 ரன்களும், பெடிங்ஹம் 4 ரன்களும் சேர்த்து களத்தில் இருந்தனர்.

இதனைத் தொடர்ந்து 2வது நாள் ஆட்டம் தொடங்கிய நிலையில், பெடிங்ஹம் 5 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். பின்னர் ரிக்கல்டன் - வெரைன் கூட்டணி இணைந்தது. வெரைன் நிதானமாக ரன்களை சேர்க்க, இன்னொரு பக்கம் சிறப்பாக ஆடிய ரிக்கல்டன் 266 பந்துகளில் இரட்டை சதத்தை விளாசி சாதனை படைத்தார். இரட்டை சதம் விளாசிய பின் ரிக்கல்டனின் அதிரடிக்கு திரும்பினார்.
இதனால் தென்னாப்பிரிக்கா அணியின் ஸ்கோர் 400 ரன்களை கடந்தது. தொடர்ந்து வெரைன் மறுமுனையில் அரைசதம் கடக்க, 7வது விக்கெட்டுக்கு 132 பந்துகளில் 100 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை எட்டினர். அதிரடியாக ஆடிய ரிக்கல்டன் முச்சதம் விளாசுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட போது, மிட் ஹம்சா பவுலிங்கில் 343 பந்துகளில் 3 சிக்ஸ், 29 பவுண்டரி உட்பட 259 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
பின்னர் வந்த மார்கோ யான்சனுடன் இணைந்து வெரைன் அதிரடி காட்ட, அவரும் தன் பங்கிற்கு சதம் விளாசி சாதனை படைத்தார். இறுதியாக தென்னாப்பிரிக்கா அணி 615 ரன்களை குவித்து ஆல் அவுட்டாகியது. இந்த இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்கா அணியின் ரிக்கல்டன், பவுமா மற்றும் விக்கெட் கீப்பர் வெரைன் ஆகிய மூவரும் சதம் விளாசி சாதனை படைத்தனர்.
இதன்பின் களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு ஷான் மசூத் - பாபர் அசாம் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. இதில் முதல் ஓவரிலேயே ஷான் மசூத் 2 ரன்களில் ஆட்டமிழக்க, பின்னர் வந்த கம்ரான் குலாம் 12 ரன்களிலும், நட்சத்திர வீரர் ஷாவுத் சக்கீல் டக் அவுட்டாகியும் வெளியேறினர். இதனால் பாகிஸ்தான் அணி 20 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இறுதியாக பாபர் அசாம் - ரிஸ்வான் இணைந்து 2வது நாள் ஆட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தனர். 2வது நாள் ஆட்டம் முடிவில் பாகிஸ்தான் அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 64 ரன்களை சேர்த்திருக்கிறது. பாபர் அசாம் 31 ரன்களும், ரிஸ்வான் 9 ரன்களும் எடுத்து களத்தில் உள்ளனர். பாகிஸ்தான் அணியின் சயீம் அயூப் காலில் காயம் அடைந்ததால், அவர் ஆட்டத்தில் இருந்து விலகி இருக்கிறார்.
கேப்டவுன் பிட்ச் ஃபிளாட்டாக மாறியுள்ள சூழலில், 3வது நாள் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி சவால் கொடுக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஒருவேளை பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் சொதப்பினால், தென்னாப்பிரிக்கா அணி இன்னிங்ஸ் வெற்றியை பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று பார்க்கப்படுகிறது.