கேப்டவுன்: பாகிஸ்தான் அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றியை பெற்றுள்ளது. இதன் மூலமாக பாகிஸ்தான் அணி SENA நாடுகளில் கடைசியாக ஆடிய 16 போட்டிகளில் ஒரு வெற்றியை கூட பெற முடியாமல் இருப்பது ரசிகர்களிடையே கடுமையான விமர்சனத்தை பெற்று வருகிறது.
தென்னாப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி கேப் டவுன் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய தென்னாப்பிரிக்கா அணி ரிக்கல்டனின் இரட்டை சதம் மற்றும் பவுமாவின் அபார சதம் காரணமாக 615 ரன்களை குவித்தது. இதன்பின் முதல் இன்னிங்ஸில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 194 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியது.

இதன் காரணமாக தென்னாப்பிரிக்கா அணி ஃபாலோ ஆன் கொடுத்தது. பின்னர் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 3வது நாள் ஆட்டம் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 213 ரன்களை குவித்திருந்தது. தொடர்ந்து கேப்டன் ஷான் மசூத் 102 ரன்களுடனும், குர்ரம் ஷேஷாத் 8 ரன்களுடனும் 4வது நாள் ஆட்டத்தை தொடர்ந்தனர். இதில் ஷேஷாத் 18 ரன்களில் ஆட்டமிழக்க, பின்னர் வந்த கம்ரான் குலாம் 28 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
இன்னொரு பக்கம் கேப்டன் ஷான் மசூத் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த அவருக்கு யாரும் உறுதுணையாக ஆடவில்லை. ஷக்கிஒஇல் நல்ல தொடக்கம் கிடைத்த போதும் 23 ரன்களில் ஆட்டமிழக்க, பாகிஸ்தான் அணியின் ஸ்கோர் 300 ரன்களை கடந்தது. இந்த நிலையில் தென்னாப்பிரிக்கா அணி புதிய பந்தை கையில் எடுத்தது. அதில் மபாகா வீசிய பந்தில் ஷான் மசூத் 145 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இதன்பின் வந்த வீரர்களில் ரிஸ்வான் 41 ரன்களும், சல்மான் ஆகா 48 ரனளும், ஆமிர் ஜமால் 34 ரன்களும் சேர்த்து ஆட்டமிழந்தனர். இறுதியாக பாகிஸ்தான் அணி 2வது இன்னிங்ஸில் 478 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. இதன் காரணமாக தென்னாப்பிரிக்கா அணியின் வெற்றிக்கு 58 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதன் பின் மார்க்ரம் - பெடிங்ஹம் கூட்டணி தொடக்கம் கொடுத்தது.
கடைசி செஷன் முடிவதற்கு தென்னாப்பிரிக்கா அணி வெற்றியை அடைய வேண்டும் என்பதில் மும்முரம் காட்டியது. அதற்கேற்ப பெடிங்ஹம் அதிரடியாக ரன்களை குவிக்க, 33 பந்துகளில் 50 ரன்களை கடந்தது. இறுதியாக 7.1 ஓவர்களில் தென்னாப்பிரிக்கா அணி 61 ரன்கள் எடுத்து 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. இதன் மூலமாக 2-0 என்ற கணக்கில் தென்னாப்பிரிக்கா அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளது.
2002ஆம் ஆண்டு டர்பன் மைதானத்தில் நடந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா வீழ்த்தியது. தற்போது 23 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் அதேபோன்ற சாதனை வெற்றியை தென்னாப்பிரிக்கா பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் பாகிஸ்தான் அணி SENA நாடுகளில் கடைசியாக ஆடிய 16 போட்டிகளில் ஒரு வெற்றியை கூட பெறாமல் 14 போட்டிகளில் தோல்வியடைந்திருப்பது தெரிய வந்துள்ளது.