செஞ்சுரியன்: பாகிஸ்தான் அணிக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலமாக தென்னாப்பிரிக்கா அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முதல்முறையாக தகுதி பெற்று சாதனை படைத்துள்ளது.
தென்னாப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி செஞ்சுரியன் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் வென்றால் தென்னாப்பிரிக்கா அணியால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியும் என்பதால், ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்திருந்தனர். இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா கேப்டன் பவுமா பவுலிங்கை தேர்வு செய்தார்.

இதன்பின் முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணி 211 ரன்களை குவித்தது. தொடர்ந்து களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி மார்க்ரம் மற்றும் கார்பின் பாஸ்ச் ஆகியோரின் அபார ஆட்டத்தால் 301 ரன்களை சேர்த்தது. இதனால் 2வது இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்கா அணி 90 ரன்கள் முன்னிலை பெற்றது. இதன்பின் பாகிஸ்தான் அணி 3வது நாள் ஆட்டத்தில் 237 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது.
இதனால் தென்னாப்பிரிக்கா அணிக்கு 148 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 3வது நாள் ஆட்டம் முடிவில் தென்னாப்பிரிக்கா அணி 27 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இந்த நிலையில் 4வது நாள் ஆட்டத்தை தென்னாப்பிரிக்கா அணியின் மார்க்ரம் - பவுமா கூட்டணி தொடங்கியது. இவர்கள் இருவரும் நிதானமாக ரன்களை சேர்த்த நிலையில், தென்னாப்பிரிக்கா அணி எளிதாக வெல்லும் என்று பார்க்கப்பட்டது.
ஆனால் 4வது விக்கெட்டுக்கு 43 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த போது மார்க்ரம் 37 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். பின்னர் பவுமா - பெடிங்ஹம் இருவரும் 34 ரன்கள் சேர்த்திருந்த போது, முகமது அப்பாஸ் பவுலிங்கில் பவுமா 40 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த வெரைன் 2 ரன்களிலும், பெடிங்ஹம் 14 ரன்களிலும், கார்பின் பாஸ்ச் டக் அவுட்டாகியும் அடுத்தடுத்து வெளியேறினர்.
இதனால் தென்னாப்பிரிக்கா அணி கண்மூடி திறப்பதற்குள் 99 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனால் பாகிஸ்தான் அணி வெற்றி பெற எளிய வாய்ப்பு கிடைத்தது. அப்போது யான்சன் - ரபாடா இருவரும் விரைவாக ரன்களை சேர்க்க தொடங்கினர். இதனிடையே மழை குறுக்கிய தென்னாப்பிரிக்கா அணிக்கு கூடுதல் சாதகம் ஏற்பட்டது.
சில நிமிட இடைவேளைக்கு பின் மீண்டும் ஆட்டம் தொடங்கிய போது ரபாடா அதிரடியாக பவுண்டரிகளை விளாசினார். இறுதியாக 39.3 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 150 ரன்களை சேர்த்து தென்னாப்பிரிக்கா அணி அபார வெற்றியை பெற்றது. சிறப்பாக ஆடிய ரபாடா 26 பந்துகளில் 5 பவுண்டரி உட்பட 31 ரன்களும், யான்சன் 16 ரன்களும் சேர்த்தனர்.
பாகிஸ்தான் அணி தரப்பில் சிறப்பாக பவுலிங் செய்த முகமது அப்பாஸ் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இந்த வெற்றியின் மூலமாக தென்னாப்பிரிக்கா அணி இங்கிலாந்து நாட்டின் லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கவுள்ள இறுதிப்போட்டிக்கு முதல்முறையாக தகுதிபெற்று சாதனை படைத்துள்ளது. இதனால் இந்தியா அல்லது ஆஸ்திரேலியா ஆகிய 2 அணிகளில் ஒருவரால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.