செஞ்சுரியன்: பாகிஸ்தான் அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்று அசத்தியுள்ளது. 207 ரன்கள் என்ற சவாலான இலக்கை விரட்டிய போது, தென்னாப்பிரிக்கா அணியின் தொடக்க வீரரான ஹென்ரிக்ஸ் 63 பந்துகளில் 10 சிக்ஸ், 7 பவுண்டரி உட்பட 117 ரன்களை விளாசி வெற்றிக்கு பாதை அமைத்தார்.
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பாகிஸ்தான் அணி விளையாடி வருகிறது. ஏற்கனவே நடந்த முதல் டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா அபார வெற்றி பெற்ற நிலையில், 2வது டி20 போட்டி நேற்றிரவு செஞ்சுரியன் மைதானத்தில் நடைபெற்றது. பாகிஸ்தான் அணி வாழ்வா சாவா சூழலில் களமிறங்கிய நிலையில், டாஸ் வென்ற கேப்டன் ரிஸ்வான் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

தொடர்ந்து கேப்டன் ரிஸ்வான் - சயீம் அயூப் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. இதில் ரிஸ்வான் 11 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், அயூப் - பாபர் அசாம் கூட்டணி இணைந்தது. இவர்கள் இருவரும் அதிரடியாக ரன்களை குவித்த நிலையில், பாகிஸ்தான் அணியின் ஸ்கோர் 10 ஓவர்களில் 90 ரன்களை எட்டியது. சிறப்பாக சயீம் அயூப் 33 பந்துகளில் அரைசதம் அடிக்க, பாபர் அசாம் 20 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் விரைவாக விக்கெட்டுகளை இழந்து வெளியேறினாலும், சயீம் அயூப் அதிரடி அடுத்த கட்டத்திற்கு சென்றது. இதனால் 19 ஓவர்களில் பாகிஸ்தான் அணி 190 ரன்களை எட்டியது. சிறப்பாக ஆடிய சயீம் அயூப் 98 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடைசி ஓவரில் பாகிஸ்தான் வீரர்கள் அவருக்கு ஒரு பந்தை கூட ஸ்ட்ரைக் கொடுக்கவில்லை.
இதனால் அவர் கடைசி வரை 57 பந்துகளில் 98 ரன்களுடன் களத்தில் இருந்தார். இறுதியாக பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 206 ரன்களை சேர்த்திருந்தது. இதன்பின் தென்னாப்பிரிக்கா அணி தரப்பில் ரிக்கல்டன் - ஹென்ரிக்ஸ் இருவரும் தொடக்கம் கொடுத்தனர். இதில் ரிக்கல்டன் வெறும் 2 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். தொடர்ந்து வந்த ப்ரீட்ஸ்கே அதிரடியாக தொடங்கினாலும் 12 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதன்பின் ஹென்ரிக்ஸ் - வான் டர் டூசன் கூட்டணி இணைந்து அதிரடியில் பொளந்து கட்டியது. ஹென்ரிக்ஸின் அபார சிக்சர்களால் தென்னாப்பிரிக்கா அணி 6 ஓவர்கள் முடிவில் 52 ரன்களை சேர்த்திருந்தது. தொடர்ந்து சிறப்பாக ஆடிய ஹென்ரிக்ஸ் 29 பந்துகளில் அரைசதம் கடந்தார். மறுமுனையில் வான் டர் டூசன் பவுண்டரிகளை விளாசி தள்ள, பாகிஸ்தான் அணி பவுலர்கள் என்ன செய்வதென தெரியாமல் தடுமாறினர்.
அரைசதத்திற்கு பின் ஹென்ரிக்ஸ் அதிரடியும் அடுத்த கட்டத்திற்கு சென்றதால், 54 பந்துகளில் சதத்தை விளாசி சாதனை படைத்தார். சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஹென்ரிக்ஸ் அடிக்கும் முதல் சதம் இதுவாகும். தொடர்ந்து அதிரடி காட்டிய அவர், 63 பந்துகளில் 10 சிக்ஸ், 7 பவுண்டரி உட்பட 117 ரன்களை விளாசி ஆட்டமிழந்தார்.
இதன்பின் வான் டர் டூசன் 33 பந்துகளில் அரைசதம் கடந்த நிலையில், கடைசி ஓவரின் 3வது பந்தில் சிக்ஸ் அடித்து தென்னாப்பிரிக்கா அணியை வெற்றி பெற வைத்தார். இதன் மூலமாக தென்னாப்பிரிக்கா அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. அதேபோல் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் தென்னாப்பிரிக்கா அணி கைப்பற்றி அசத்தியுள்ளது.