டர்பன்: இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி 233 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. இதன் மூலமாக டர்பன் மைதானத்தில் தென்னாப்பிரிக்கா அணி இலங்கை அணியை வீழ்த்தி புதிய வரலாறு படைத்துள்ளது.
டர்பன் மைதானத்தில் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி விளையாடியது. இந்த மைதானத்தில் தென்னாப்பிரிக்கா அணி எப்போதும் திணறும் என்பதால், இலங்கை வெல்வதற்கு வாய்ப்பு இருப்பதாக பார்க்கப்பட்டது. இதன்பின் முதல் பேட்டிங் ஆடிய தென்னாப்பிரிக்கா அணி 191 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது.

இதன்பின் களமிறங்கிய இலங்கை அணி யாரும் எதிர்பாராத வகையில் 42 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. தென்னாப்பிரிக்கா அணியின் மார்கோ யான்சன் 7 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதன்பின் 2வது இன்னிங்ஸில் கேப்டன் பவுமா மற்றும் ஸ்டப்ஸ்-ன் அபார சதத்தால், தென்னாப்பிரிக்கா அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 366 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்வதாக அறிவித்தது.
இதன் காரணமாக இலங்கை அணி வெற்றி பெற 515 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது,. இந்த நிலையில் 3வது நாள் ஆட்டம் முடிவில் இலங்கை அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 103 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்தது. சண்டிமால் 29 ரன்களும், கேப்டன் தனஞ்செயா டி சில்வா 0* ரன்களுடன் களத்தில் இருந்தனர். 3வது நாள் முடிவிலேயே இலங்கை அணியின் தோல்வி கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டது.
இதன்பின் 4வது நாள் ஆட்டம் தொடங்கிய நிலையில், 6வது விக்கெட்டுக்கு இருவரும் 95 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். சிறப்பாக ஆடி அரைசதம் அடித்த தனஞ்செயா டி சில்வா 59 ரன்களிலும் ஆட்டமிழக்க, பின்னர் சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட சண்டிமால் 83 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, இலங்கை அணி 282 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது.
இதனால் தென்னாப்பிரிக்கா அணி 233 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. இந்தப் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்த மார்கோ யான்சன் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இரு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து யான்சன் 11 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். இதன் மூலமாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் 2வது இடத்திற்கு தென்னாப்பிரிக்கா முன்னேறியுள்ளது.