ஆன்டிகுவா : அமெரிக்கா அணிக்கு எதிரான சூப்பர் 8 போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. கடைசி 2 ஓவர்களில் 28 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் அமெரிக்கா அணி இருந்த போது, ரபாடாவின் பவுலிங் ஒட்டுமொத்த ஆட்டத்தையும் தென்னாப்பிரிக்கா அணி பக்கம் திருப்பியது.
டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றில் தென்னாப்பிரிக்கா அணியை எதிர்த்து அமெரிக்கா அணி களமிறங்கியது. இதில் டாஸ் வென்ற அமெரிக்கா அணியின் கேப்டன் ஆரோன் ஜோன்ஸ் பவுலிங்கை தேர்வு செய்தார். இதன்பின் முதலில் பேட்டிங் ஆடிய தென்னாப்பிரிக்கா அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 194 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக தொடக்க வீரர் டி காக் 40 பந்துகளில் 74 ரன்களும், அமெரிக்கா அணி தரப்பில் நெட்ரவால்கர் 4 ஓவர்களில் 21 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதன்பின் 195 என்ற கடினமான இலக்குடன் அமெரிக்கா அணியின் ஸ்டீவன் டெய்லர் - ஏட்ரியஸ் கெளஸ் கூட்டணி களமிறங்கியது. யான்சன் வீசிய முதல் ஓவரில் நிதானம் காத்த நிலையில், மார்க்ரம் வீசிய 2வது ஓவரில் 13 ரன்கள் விளாசப்பட்டது. தொடர்ந்து 3வது ஓவரில் 10 ரன்கள் சேர்க்கப்பட, தென்னாப்பிரிக்கா அணிக்கு விக்கெட் தேவை என்ற நிலை உருவாகியது. அப்போது அட்டாக்கில் வந்த ரபாடா 3வது பந்திலேயே அதிரடியாக ஆடிய ஸ்டீவன் டெய்லரை 24 ரன்களில் வீழ்த்தினார்.
தொடர்ந்து வந்த நிதீஷ் குமாரும் 8 ரன்களில் ஆட்டமிழக்க, அமெரிக்கா அணி 6 ஓவர்களில் 55 ரன்களை சேர்த்திருந்தது. பின்னர் கேப்டன் ஜோன்ஸ் டக் அவுட்டாகி வெளியேற, அனுபவ வீரர் ஆண்டர்சனும் 12 ரன்களில் வீழ்த்தப்பட்டார். இதனால் அமெரிக்கா அணி 11 ஓவர்களில் 76 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தவித்தது. இதையடுத்து கெளஸ் - ஹர்மீத் சிங் கூட்டணி இணைந்து அதிரடியாக ரன்களை குவிக்க தொடங்கியது. ஒவ்வொரு ஓவருக்கும் சிக்சரும், பவுண்டரியுமாய் பொளந்து கட்ட தொடங்கினர்.
நார்கியே வீசிய 15வது ஓவரில் மட்டும் 2 சிக்ஸ், ஒரு பவுண்டரி உட்பட 19 ரன்கள் விளாசப்பட்டது. சிறப்பாக ஆடிய கெளஸ் 33 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். அடுத்தடுத்து அதிரடி காட்டியதால் அமெரிக்கா அணியின் வெற்றிக்கு 18 பந்துகளில் 50 ரன்கள் தேவையாக இருந்தது. இந்த நிலையில் 18வது ஓவரை வீசிய ஷம்சி பவுலிங்கில் 3 சிக்ஸ் உட்பட 22 ரன்கள் விளாசப்பட்டது. இதனால் 12 பந்துகளில் 28 ரன்கள் மட்டுமே வெற்றிக்கு தேவையாக வந்தது. அப்போது ரபாடா பந்தில் சிறப்பாக ஆடிய ஹர்மீத் சிங் 22 பந்துகளில் 36 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
19வது ஓவரில் 2 ரன்கள் மட்டுமே சேர்க்கப்பட்டதால், கடைசி ஓவரில் அமெரிக்கா வெற்றிக்கு 26 ரன்கள் தேவையாக இருந்தது. கடைசி ஓவரை வீச நார்கியே அழைக்கப்பட்டார். அதில் அமெரிக்கா அணி 7 ரன்களை மட்டுமே சேர்த்த நிலையில், தென்னாப்பிரிக்கா அணி 18 ரன்கள் வித்தியாசத்தில அபார வெற்றியை பெற்றது. கடைசி வரை களத்தில் இருந்த கெளஸ் 47 பந்துகளில் 5 சிக்ஸ், 5 பவுண்டரி உட்பட 80 ரன்களை விளாசினார். தென்னாப்பிரிக்கா அணி தரப்பில் ரபாடா 4 ஓவர்கள் வீசி 18 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.