செஞ்சூரியன்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில், தென்னாப்பிரிக்கா அணி 222 ரன்கள் என்ற இமாலய இலக்கை மிக எளிதாக எட்டிப்பிடித்து அபார வெற்றி பெற்றது. துவக்க வீரர் குயின்டன் டி காக் சதம் விளாசி அணியின் வெற்றிக்கு வித்திட்டார். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் தென்னாப்பிரிக்கா கைப்பற்றியுள்ளது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி, தென்னாப்பிரிக்க பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தது. பிராண்டன் கிங் மற்றும் ஷிம்ரன் ஹெட்மையர் ஜோடி இரண்டாவது விக்கெட்டிற்கு 126 ரன்கள் குவித்து வலுவான அடித்தளம் அமைத்தது. பிராண்டன் கிங் 49 ரன்களிலும், ஹெட்மையர் 75 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

கடைசி கட்டத்தில் ருதர்ஃபோர்ட் ருத்ரதாண்டவம் ஆடினார். வெறும் 24 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 57 ரன்கள் குவித்த அவர், அணியின் ஸ்கோரை உயர்த்தினார். தென்னாப்பிரிக்க அணியின் அதிவேக பந்துவீச்சாளர் அன்ரிச் நோர்ட்ஜே 3 ஓவர்களில் 59 ரன்களை வாரி வழங்கினார். இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 221 ரன்கள் குவித்தது.
222 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி களமிறங்கிய தென்னாப்பிரிக்காவுக்கு குயின்டன் டி காக் மற்றும் ரியான் ரிக்கெல்டன் ஜோடி மின்னல் வேக துவக்கம் அளித்தது. குறிப்பாக டி காக் வானவேடிக்கை காட்டினார். பந்துவீச்சாளர்கள் யாராக இருந்தாலும் பாரபட்சம் பார்க்காமல் சிக்ஸர்களைப் பறக்கவிட்டார்.
இந்த ஜோடி இரண்டாவது விக்கெட்டிற்கு 162 ரன்கள் சேர்த்தது. சர்வதேச டி20 போட்டிகளில் தனது இரண்டாவது சதத்தைப் பதிவு செய்த டி காக், 49 பந்துகளில் 115 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதில் 10 சிக்ஸர்கள் மற்றும் 6 பவுண்டரிகள் அடங்கும். மறுமுனையில் ரிக்கெல்டன் 77 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்த போட்டியில் டி காக் தனது சொந்த பேட்டைப் பயன்படுத்தவில்லை என்பது சுவாரஸ்யமான தகவலாகும். போட்டிக்கு வரும்போது தனது பேட்டுகளைத் தவறுதலாக வீட்டிலேயே வைத்துவிட்டு வந்துவிட்டதாக அவர் தெரிவித்தார். இதனால் சக இளம் வீரரான டெவால்ட் பிரெவிஸிடம் இருந்து பேட்டை இரவல் வாங்கி விளையாடினார். அந்த இரவல் பேட்டில் தான் அவர் சதம் விளாசி அணிக்கு வெற்றியையும் தேடித்தந்துள்ளார்.
டி காக் மற்றும் ரிக்கெல்டன் அதிரடியால் தென்னாப்பிரிக்கா அணி 17.3 ஓவர்களிலேயே 3 விக்கெட் இழப்பிற்கு 225 ரன்கள் எடுத்து, 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்னும் 15 பந்துகள் மீதம் இருக்கும் நிலையிலேயே அந்த அணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றியின் மூலம் டி20 தொடரைத் தென்னாப்பிரிக்கா கைப்பற்றியுள்ளது. மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற்று 2 - 0 என தொடரை கைப்பற்றி உள்ளது. மூன்றாவது போட்டியையும் கைப்பற்றுமா? என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.