புலவாயோ: தென்னாப்பிரிக்கா அணியில் இடம்பெற்றுள்ள சிஎஸ்கே வீரர் டெவால்ட் பிரெவிஸ், டெஸ்ட் போட்டியில் நேற்று அறிமுகமானார். ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அவர் தென்னாப்பிரிக்கா அணிக்காகக் களமிறங்கினார். அதிரடி பேட்ஸ்மேனாக அறியப்படும் அவர், டெஸ்ட் போட்டியிலும் அதிரடியாக விளையாடி ஒரு சாதனையைப் படைத்துள்ளார்.
இந்தப் போட்டியில் அதிரடியாக ஆடிய பிரெவிஸ், 41 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதில் மூன்று பவுண்டரிகளும் நான்கு சிக்ஸர்களும் அடங்கும். வெறும் 38 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார். இதன் மூலம், டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் இன்னிங்ஸில் அதிவேக அரைசதம் அடித்த வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

இதற்கு முன் நியூசிலாந்து அணியின் டிம் சவுதி தனது முதல் டெஸ்ட் போட்டியில் 29 பந்துகளில் அரைசதம் அடித்திருந்தார். இங்கிலாந்து அணியின் ஜேக்கப் பெத்தேல் 37 பந்துகளில் அரைசதம் அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், அவர்கள் இரண்டாவது இன்னிங்ஸில் தான் அந்த சாதனையை செய்து இருந்தனர். டெவால்ட் பிரெவிஸ் டெஸ்ட் அறிமுகமான முதல் இன்னிங்ஸிலேயே அதிரடியாக ஆடி 38 பந்தில் அதிவேகமான அரைசதத்தை அடித்தார்.
டெவால்ட் பிரெவிஸ் ஐந்தாவது விக்கெட்டுக்கு, மற்றொரு அறிமுக வீரரான லுவான் பிரீட்டோரியஸுடன் இணைந்து 95 ரன்கள் சேர்த்தார். பிரீட்டோரியஸ் தனது அறிமுகப் போட்டியிலேயே சதம் அடித்து 153 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது. கார்பின் பாஷ் முதல் நாள் ஆட்டத்தில் 100 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். முதல் நாளின் முடிவில் தென்னாப்பிரிக்கா அணி 9 விக்கெட் இழப்பிற்கு 418 ரன்கள் எடுத்திருந்தது.
டெவால்ட் பிரெவிஸ் 2025 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக உள்ளார். அவர் கடந்த ஐபிஎல் தொடரின் பின்பகுதியில்தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்தார். ஆனால் அவர் ஆடிய ஒவ்வொரு போட்டியிலும் அதிரடியாக ரன்கள் குவித்து அசத்தியிருந்தார். அவர் 2026 ஐபிஎல் தொடரிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தொடர்ந்து இடம்பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.